மேடையில் பாலகிருஷ்ணா தள்ளிவிட்ட விவகாரம் - மவுனம் கலைத்த நடிகை அஞ்சலி


Actress Anjali breaks silence after Nandamuri Balakrishna pushed her at Gangs of Godavari event
x

பாலகிருஷ்ணா தனது அருகில் நின்ற அஞ்சலியை பிடித்து தள்ளிவிட்டார்.

சென்னை,

விஸ்வக் சென் நடிப்பில் கிருஷ்ண சைதன்யா இயக்கியுள்ள படம் 'கேங்ஸ் ஆப் கோதாவரி'. இதில் அஞ்சலி, நேஹா ஷெட்டி உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின்போது மேடையில் ஏறிய பாலகிருஷ்ணா அங்கே நின்று கொண்டிருந்த அஞ்சலி, நேஹா ஷெட்டி இருவரையும் தள்ளி நிற்க சொன்னார். ஆனால் இருவரும் அதை கவனிக்காமல் இருந்ததால் தனது அருகில் நின்ற அஞ்சலியை பிடித்து தள்ளிவிட்டார். ஒரு நிமிடம் தடுமாறிய அஞ்சலி பின்னர் சிரித்து சமாளித்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாலகிருஷ்ணாவின் இந்த செயலை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அஞ்சலி சாதாரணமாக எடுத்துக் கொண்டு சிரித்தாலும், மேடையில் பாலகிருஷ்ணா இதுபோன்று அநாகரிகமாக நடந்து கொண்டிருக்கக் கூடாது என காட்டமாக பதிவிட்டு வருகிறார்கள். அதேவேளையில், பாலகிருஷ்ணா விளையாட்டாக அஞ்சலியை பிடித்து தள்ளியதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எந்த தகவலும் வெளிவராத நிலையில், தற்போது நடிகை அஞ்சலி மவுனம் கலைத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ பகிர்ந்துள்ளார். அதனுடன் பகிர்ந்த பதிவில்,

'கேங்க்ஸ் ஆப் கோதாவரி' படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த பாலகிருஷ்ணா அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாலகிருஷ்ணா சாரும் நானும் எப்போதும் பரஸ்பர மரியாதை பேணி வருகிறோம் என்பதையும், நீண்ட காலமாக நட்பைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் அவருடன் மேடையை பகிர்ந்து கொண்டது அருமை,' இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Next Story