பிடிவாரண்ட் பிறப்பித்ததால் நடிகை ஜெயப்பிரதா கோர்ட்டில் சரண்


பிடிவாரண்ட் பிறப்பித்ததால் நடிகை ஜெயப்பிரதா கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 6 March 2024 2:44 AM GMT (Updated: 6 March 2024 6:22 AM GMT)

முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ஜெயப்பிரதாவை தேடப்படும் நபராக கோர்ட்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

லக்னோ,

பிரபல பாலிவுட் நடிகை ஜெயப்பிரதா. இவர் தமிழ். தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இதனிடையே, சினிமா துறையிலிருந்து விலகிய ஜெயப்பிரதா 1994ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். அதன்பின்னர் ஜெயப்பிரதா மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய ஜெயப்பிரதா 2019ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் ஜெயப்பிரதா பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டார். அப்போது தேர்தல் விதியை மீறி ஒரு சாலையை திறந்து வைத்ததாக ராம்பூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக ராம்பூரில் உள்ள கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஜெயப்பிரதா நேரில் ஆஜராக கோர்ட்டு 7 முறை சம்மன் அனுப்பியது. ஆனால். ஜெயப்பிரதா விசாரணைக்கு ஆஜராகாமல் தாமதித்து வந்தார்.

இதையடுத்து ஜெயப்பிரதாவை தலைமறைவான குற்றவாளியாக அறிவித்து கைது செய்து ஆஜர்படுத்தும்படி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிடிவாரண்டை ரத்து செய்யும்படி ஜெயப்பிரதா தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடியானது.

இதனால் ஜெயப்பிரதா கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.


Next Story