'துணிவு' படத்தின் டப்பிங் பணிகளை முடித்த அஜித் - விரைவில் டீசர் வெளியாகும் என எதிர்பார்ப்பு


துணிவு படத்தின் டப்பிங் பணிகளை முடித்த அஜித் - விரைவில் டீசர் வெளியாகும் என எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 4 Nov 2022 12:58 PM GMT (Updated: 4 Nov 2022 1:07 PM GMT)

நடிகர் அஜித்குமார், 'துணிவு' படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து 3-வது முறையாக அஜித்-எச்.வினோத் கூட்டணியில் 'துணிவு' படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொகைன், அமீர், பாவனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னை, விசாகப்பட்டினம், பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வந்தது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரும் என தகவல்கள் வெளியான நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே 'துணிவு' படத்தின் டப்பிங் பணிகள் அண்மையில் தொடங்கியது. இது குறித்த புகைப்படங்களை நடிகை மஞ்சு வாரியார் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் நடிகர் அஜித்குமார், 'துணிவு' படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்து படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி உள்ளிட்ட அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.


Next Story