'ப்ளூ ஸ்டார்' விமர்சனம் - கிரிக்கெட்டில் சாதி அரசியல்.. சிக்ஸர் அடித்ததா..?


ப்ளூ ஸ்டார் விமர்சனம் - கிரிக்கெட்டில் சாதி அரசியல்.. சிக்ஸர் அடித்ததா..?
x
தினத்தந்தி 28 Jan 2024 3:58 AM GMT (Updated: 28 Jan 2024 10:50 AM GMT)

அசோக் செல்வன் நடை, உடை, தோற்றம் என எல்லா விதத்திலும் ஆள் அடையாளம் தெரியாமல் மாறியிருப்பது ஆச்சர்யம்.

காலனியைச் சேர்ந்த அசோக் செல்வன் ப்ளூ ஸ்டார் கிரிக்கெட் அணியின் கேப்டன். இன்னொரு பகுதியைச் சேர்ந்த சாந்தனு ஆல்பா கிரிக்கெட் அணியின் கேப்டன். கோவிலுக்கு சொந்தமான மைதானத்தில் இரு அணியினரும் தனித்தனியாக விளையாடி வருகிறார்கள்.

ஒரு முறை இவர்களுக்குள் தகராறு உருவாகி எது சிறந்த அணி என்று நிரூபிக்க நேரடியாக மோதுகிறார்கள். சாந்தனு தொழில்முறை கிரிக்கெட் வீரர்களை பணம் கொடுத்து அழைத்து வந்து வெற்றி காண்கிறார்.

ஒரு கட்டத்தில் தொழில் முறை கிரிக்கெட் வீரர்களும், பயிற்சியாளரும் சாந்தனுவை 'எங்களுடன் விளையாட தகுதி வேண்டும்' என்று அவமானப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு பதிலடி கொடுக்க எதிரிகளாக இருந்த அசோக் செல்வனும் சாந்தனுவும் ஒன்று சேர்ந்து தொழில்முறை கிரிக்கெட் வீரர்களுடன் விளையாட தயாராகிறார்கள். போட்டியில் அவர்களால் வெல்ல முடிந்ததா? என்பது மீதி கதை.

அசோக் செல்வன் நடை, உடை, தோற்றம் என எல்லா விதத்திலும் ஆள் அடையாளம் தெரியாமல் மாறியிருப்பது ஆச்சர்யம். சராசரி நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனின் குணாதிசயத்தை சிறிதும் பிசிறு தட்டாமல் வெளிப்படுத்தியிருக்கிறார்.

சாந்தனுவை இதுவரை அப்படி பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. உள்ளுக்குள் இருந்த அத்தனை திறமையையும் மிக அழகாக வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். சாதிய பெருமையை கண்களால் காட்டுவதாகட்டும், எதிரிகளை பந்தாடுவதாகட்டும் தன்னை நோக்கி வரும் எல்லா பந்துகளையும் எல்லைக் கோட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.

கீர்த்தி பாண்டியன் காதலனிடம் கொஞ்சி குலவி காதல் வளர்க்கும் காட்சிகளில் நடிப்பாற்றலை மிக சுலபமாக வெளிப்படுத்திவிடுகிறார். பிருத்திவிராஜன், பகவதி பெருமாள், குமரவேல், திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி என துணை பாத்திரங்களில் வரும் அனைவரும் படத்தை நகர்த்த பெரும் துணை செய்கிறார்கள்.

கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள், பின்னணி இசை அனைத்தும் தரம். தமிழ் அ.அழகன், உலகத் தரமான ஒளிப்பதிவால் மாயம் எதுவுமில்லாமல் நம்மை விளையாட்டு மைதானத்தில் உட்கார வைத்துவிடுகிறார். மின்சார ெரயில், விளையாட்டுத் திடல் என கதை எங்கெல்லாம் பயணிக்கிறதோ அங்கெல்லாம் ஓடி…ஒடி உழைத்திருக்கிறார்.

திறமைக்கும் தகுதிக்கும் இடையே உள்ள பேதங்களை விளையாட்டை பின்னணியாக வைத்து சொல்லியுள்ளார் இயக்குனர் ஜெயக்குமார். ஒற்றுமையின் மேன்மை, உண்மையான எதிரி யார் என படம் பிடித்து காட்டிய விதத்தில் அவரின் படைப்பாற்றலும், பக்குவமும் தரமாக தெரிகிறது. பின் பாதியின் நீளம், யூகிக்கக்கூடிய காட்சிகள் பலகீனம்.


Next Story