'அரசியல் தொடர்பான கேள்விகள் கேட்க வேண்டாம்' - நடிகர் ரஜினிகாந்த்


அரசியல் தொடர்பான கேள்விகள் கேட்க வேண்டாம் - நடிகர் ரஜினிகாந்த்
x
தினத்தந்தி 10 Feb 2024 7:00 AM GMT (Updated: 10 Feb 2024 7:02 AM GMT)

'வேட்டையன்' படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று ஐதராபாத் புறப்பட்டு சென்றார்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த், கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வசூலில் ரூ.600 கோடியை தாண்டிய நிலையில் ஜெயிலர் படம் ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்தது. பின்னர் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி உள்ள 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்து இருந்தார். அந்த படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் உடன் 170வது படத்தில் இணைந்துள்ளார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா ரகுபதி, பஹத் பாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படம் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. 'வேட்டையன்' என பெயரிடப்பட்டு உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 'வேட்டையன்' படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று ஐதராபாத் புறப்பட்டு சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'லால் சலாம் படம் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ரொம்ப பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அதனால் லைகா நிறுவனம், இயக்குனர் ஐஸ்வர்யா மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

என்னுடைய அடுத்த படமான 'வேட்டையன்' படப்பிடிப்பு 80 சதவிகிதம் முடிந்து விட்டது. இன்னும் 20 சதவிகித படப்பிடிப்பு மட்டுமே உள்ளது. அது முடிந்தவுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நான் நடிக்கும் படப்பிடிப்பு தொடங்கும்' என்று தெரிவித்தார். அப்போது அவரிடம் நடிகர் விஜய் மற்றும் விஷாலின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், 'சாரி, அரசியல் தொடர்பான கேள்விகள் கேட்க் வேண்டாம்;' என செய்தியாளார்களிடம் தெரிவித்தார்.


Next Story