மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லையா...? உண்மையை போட்டுடைத்த மம்முட்டி பட நடிகை!


மலையாள சினிமாவில்  நடிகைகளுக்கு பாலியல் தொல்லையா...? உண்மையை போட்டுடைத்த மம்முட்டி பட நடிகை!
x

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மிடூ குற்றச்சாட்டை முன்வைப்பது நியாயமற்றது என நடிகை சுவாசிகா கூறினார்.


திருவனந்தபுரம்

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து பல முன்னணி இளம் நடிகைகளும் அடிக்கடி புகார்கள் கூறி வந்தனர். மேலும், மலையாள பட உலகில் பாலியல் தொல்லைகள் இருப்பதாகவும், படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால், படுக்கைக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து இந்த தொல்லைகளில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க, பாதுகாப்பு சங்கம் தொடங்கப்பட்டது.

மலையாள நடிகைகள் ரம்யா நம்பீசன், ரேவதி, பார்வதி உள்ளிட்டோர் இணைந்து இந்த பாதுகாப்பு சங்கத்தை தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நடிகை சுவாசிகா பாலியல் பாலியல் தொல்லைகள் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மலையாள திரையுலகம் பெண்களுக்கு பாதுகாப்பானதாக தான் இருக்கிறது. இங்கு பெண்களை யாரும் படுக்கைக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்துவது கிடையாது. பெண்களுக்கு விருப்பம் இல்லையென்றால் தைரியமாக மறுப்பு தெரிவிக்கலாம். அதன்பின் யாரும் வற்புறுத்த முடியாது.

இரவு யாராவது உங்கள் ரூம் கதவை தட்டினால் நீங்கள் திறக்கக் கூடாது. கதவு திறக்காமல் உங்கள் ரூம் உள்ளே யாரும் வர முடியாது. அதையும் மீறி ஏதேனும் மோசமான அனுபவம் நேர்ந்தால் போலீஸ் நிலையத்துக்கோ அல்லது மகளிர் ஆணையத்திலோ புகார் செய்யலாம்.

சினிமா பெண்கள் நல அமைப்பில் புகார் செய்ய தேவை இல்லை. அந்த அமைப்பின் மூலம் நீதி கிடைக்கும் என்ற உத்தரவாதமும் இல்லை. அதற்கு நேரம் எடுக்கும். உங்களுக்கு மோசமான அனுபவம் இருந்தால், நீங்கள் ஏன் சினிமா பெண்கள் நல அமைப்பை ஏன் அணுக வேண்டும்? நீங்கள் காவல் நிலையம் அல்லது மகளிர் ஆணையத்திற்குச் செல்லலாம்

சினிமா பெண்கள் நல அமைப்பு நமக்குத் தேவையா என்று நீங்கள் என்னிடம் கேட்டால், அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது என்பதே எனது நேர்மையான கருத்து. விரும்பத்தகாத சம்பவத்தை எதிர்கொள்ள நேர்ந்தால், உடனடியாக ரியாக்ட் செய்து படப்பிடிப்பை விட்டு வெளியேறிவிடுவேன்

பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு எதிராக சினிமா பெண்கள் நல அமைப்பு கடுமையாக செயல்பட வேண்டும்.

பெண்கள் முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது நமக்குத் தேவையான தைரியம்தான். தேவைப்படும் இடத்தில் 'இல்லை' என்று சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மிடூ குற்றச்சாட்டை முன்வைப்பது நியாயமற்றது. இன்னும் பெரிய வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் படம் வேண்டாம் என்று சொல்லுங்கள் என கூறினார்.

சுவாசிகாவின் இந்த பேட்டி மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் கோரிப்பாளையம் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சுவாசிகா. சின்ன திரையில் இருந்து சினிமாவில் அடியெடுத்து வைத்த சுவாசிகா, தொடர்ந்து மைதானம், சோக்காளி, அப்புச்சி கிராமம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் மிகப் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத சுவாசிகா தற்போது மலையாளத்தில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். மம்முட்டியுடன் சிபிஐ 5ம் பாகம், மோகன்லாலுடன் மான்ஸ்டர் போன்ற படங்களிலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.



Next Story