'வந்தே மாதரம்' பாடலை பாடிய வெளிநாட்டு ரசிகை... வீடியோ எடுத்த ஏ.ஆர்.ரகுமான்...!


வந்தே மாதரம் பாடலை பாடிய வெளிநாட்டு ரசிகை... வீடியோ எடுத்த ஏ.ஆர்.ரகுமான்...!
x
தினத்தந்தி 13 Jan 2024 9:53 AM GMT (Updated: 13 Jan 2024 10:00 AM GMT)

ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் இந்தியாவைத் தாண்டி உலகளவிலும் பலரால் ரசிக்கப்படுகின்றன.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான் இசைப்புயல் என மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். "ரோஜா" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று ஆஸ்கர் நாயகனாக வலம் வருகிறார்.

இவர் தற்போது தமிழில் லால் சலாம், தக் லைப் போன்ற படங்களுக்கும் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் புதிய படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இவரின் பாடல்கள் இந்தியாவைத் தாண்டி உலகளவிலும் பலரால் ரசிக்கப்படுகின்றன.

இந்நிலையில் வெளிநாட்டு ரசிகை ஒருவர் ஏ.ஆர்.ரகுமானிடம் 'வந்தே மாதரம்' பாடலை பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காரின் உள்ளே அமர்ந்திருக்கும் ஏ.ஆர்.ரகுமானிடம் வெளிநாட்டு ரசிகை ஒருவர், 'நான் உங்களின் தீவிர ரசிகை, உங்களுக்காக ஒரு பாட்டு பாடலாமா..?' எனக் கேட்கிறார்.

அதற்கு ஏ.ஆர்.ரகுமான் 'ஆம்' என்றவுடன், அந்த ரசிகை 'வந்தே மாதரம்' பாடலை பாட தொடங்குகிறார். உடனே ஏ.ஆர்.ரகுமான் அதனை தனது செல்போனில் வீடியோ எடுக்கிறார். தற்போது அந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார்.


Next Story