முதல் முறையாக காதல் படத்தில் நடித்துள்ளேன் - விஜய் ஆண்டனி


முதல் முறையாக காதல் படத்தில் நடித்துள்ளேன் - விஜய் ஆண்டனி
x
தினத்தந்தி 15 March 2024 10:26 AM GMT (Updated: 15 March 2024 12:56 PM GMT)

'ரோமியோ' திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது.

சென்னை,

இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் 'ரோமியோ'. இந்த படத்தில் மிருணாளினி ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா, ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'ரோமியோ' திரைப்படம் ரம்ஜான் அன்று வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படத்தின் இரண்டாவது பாடல் நேற்று வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'ரோமியோ' திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது.

இந்த படம் தொடர்பான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை மிருணாளினி ரவி, இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் மற்றும் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

இந்த படம் குறித்து நடிகர் விஜய் ஆண்டனி பேசும்போது, "இந்த மேடையே சந்தோஷமாக உள்ளது. விநாயக் போன்ற திறமையான இயக்குனரை அறிமுகப்படுத்தி இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி. மிருணாளினி தன்மையான நல்ல பொண்ணு. முதன் முறையாக ஒரு காதல் படத்தில் நடித்துள்ளேன். ஒரு பெண் எப்படி ஆணை கொடுமைப்படுத்துகிறாள், ஆண் சமூகம் எப்படி இதை பொறுத்துக் கொள்கிறது என்பதுதான் கதை. குடும்பத்தோடு நிச்சயம் படத்தைப் பார்க்கலாம்" என்றார்.

தொடர்ந்து நடிகை மிருணாளினி ரவி பேசும்போது , "ரோமியோ' படம் என் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். பட வாய்ப்பு என்பதை விட இதை பொறுப்பாகவே பார்க்கிறேன். மிருணாளினி என இயக்குநர் என்னைக் கூப்பிட்டதே இல்லை. லீலா என்றுதான் கூப்பிடுவார். அந்த அளவுக்கு கதையோடு ஒன்றிவிட்டார். பல விஷயங்கள் விஜய் ஆண்டனி சாரை பார்த்து தான் கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தில் நான் முதல்முறையாக டப்பிங் செய்திருக்கிறேன் என்றார்".

இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் பேசும்போது , " ஒரு கணவனாக காதலனாக ஒரு ஆணை பெண் எப்படி பார்க்க வேண்டும் என்பதுதான் கதை. அதற்கான இன்ஸ்பிரேஷன் என் அம்மாதான். அவருக்கு நன்றி. லவ் ஸ்டோரி என முடிவு செய்ததும் எல்லாரும் நோ சொன்னார்கள். அப்போதே இதைத்தான் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. இது வழக்கமான காதல் கதை கிடையாது. சக்சஸ்புல்லான மனிதன் தன் வாழ்வில் மிஸ் செய்யும் காதல்தான் 'ரோமியோ'. பல சர்ப்ரைஸான விஷயங்கள் கதையில் இருக்கிறது. தன் வாழ்வில் வரும் பெண்ணை எப்படி அணுக வேண்டும் என இதில் சொல்லி இருக்கிறோம் என்றார்".


Next Story