நடிகர் விஜய் தொடங்கி உள்ள அரசியல் கட்சிக்கு எனது ஆதரவு உண்டு - விஜய் ஆண்டனி


நடிகர் விஜய் தொடங்கி உள்ள அரசியல் கட்சிக்கு எனது ஆதரவு உண்டு - விஜய் ஆண்டனி
x

அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் வழங்கினால் வறுமை, சூழ்நிலை கருதி அந்த பணத்தை வாங்கி கொள்ளலாம் என்று விஜய் ஆண்டனி கூறினார்.

பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த 'சுக்ரன்' படம் மூலம் தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. இதையடுத்து டிஸ்யூம், நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன் போன்ற படத்தில் 'ஹிட்' பாடல்களை கொடுத்ததன் மூலம் விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரானார்.அதன்பின் விஜய் ஆண்டனி திடீரென சினிமாவில் ஹீரோவானார். இதையடுத்து இசையமைப்பதை நிறுத்திக் கொண்டார்.

தற்போது கதாநாயகன் விஜய் ஆண்டனி - மிருணாளினி ரவி நடித்துள்ள படம் 'ரோமியோ'.இந்த படத்தை விஜய் ஆண்டனி பிலிம்ஸ் தயாரித்து உள்ளது. விநாயக் வைத்தியநாதன் இப்படத்தை இயக்கி உள்ளார்.

இப்படம் வருகிற 11 - ந்தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் விஜய் ஆண்டனி, ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கோவையில் இன்று நடிகர் விஜய் ஆண்டனி, மிருணாளினி ஆகியோர் பேட்டி அளித்தனர்.

அப்போது விஜய் ஆண்டனி கூறியதாவது, "ரோமியோ' படம்' அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் உருவாக்கி உள்ளோம். ரோமியோ திரைப்படம் காதல் குறித்து விளக்குவதாகவும், திருமணத்திற்குப் பிறகு கணவன் - மனைவி இடையே காதல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் படத்தில் தெரிவித்து உள்ளோம். பெண்கள் என்றுமே ஆண்களுக்கு மேலானவர்கள்.ஆண்கள் நிறைய இடங்களில் தோல்வி அடையும் போது அவர்களை தேற்றுவதில் ஒரு தாய், மனைவி போன்றவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்

நடிகர் விஜய் தற்போது தொடங்கி உள்ள அரசியல் கட்சிக்கு எனது ஆதரவு உண்டு. மேலும் அனைத்து கட்சிகளுக்கும் ஆதரவு அளிக்கிறேன்.தற்போது அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் வழங்கினால் வறுமை, சூழ்நிலை கருதி அந்த பணத்தை வாங்கி கொள்ளலாம். ஆனால் பணம் பெற்றதால் அந்த கட்சிக்கு தான் ஓட்டு போட வேண்டும் என முடிவு செய்யாமல், நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்" என தெரிவித்தார்.

'ரோமியோ' திரைப்படம் ரம்ஜான் அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது.


Next Story