கலாசேத்ரா விவகாரம்: அபிராமி கருத்துக்கு சனம் ஷெட்டி எதிர்ப்பு


கலாசேத்ரா விவகாரம்: அபிராமி கருத்துக்கு சனம் ஷெட்டி எதிர்ப்பு
x

கலாசேத்ரா கல்லூரி பேராசியர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். கல்லூரியின் பேராசிரியர் ஹரிபத்மனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இந்த விவகாரத்தில் பிக்பாஸ் நடிகை அபிராமி, பேராசிரியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அவர் கூறும்போது, "நான் கலாசேத்ரா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி. பேராசிரியர் ஹரிபத்மன் எங்களுக்கு வகுப்பு எடுத்துள்ளார். அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. பிரச்சினைக்கு அங்குள்ள 2 பேராசிரியைகள்தான் காரணம்.

அவர்கள் என்னிடமும், ஹரிபத்மனுக்கு எதிராக பேசும்படி வற்புறுத்தினர். இருதரப்பிலும் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும்'' என்றார். அவரது கருத்தை சிலர் ஆதரித்தாலும், பெரும்பாலானோர் எதிர்த்தனர்.

இந்த நிலையில் நடிகை சனம் ஷெட்டியும், அபிராமியை விமர்சித்துள்ளார். சனம் ஷெட்டி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "அவர்கள் குரல் கொடுப்பதற்கு யாரும் பாடம் சொல்லித்தர தேவை இல்லை. தங்களுக்கு நடந்துள்ள கொடுமைக்கு எதிராக போராட அவர்களுக்கு தைரியம் மட்டும் தேவை. அது அவர்களுக்கு இருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை என்றால், பேசாமல் உட்காருவது நல்லது. உண்மை வெளியில் வரட்டும். உங்களுக்கு நடக்கவில்லை என்பதற்காக, மற்றவர்களுக்கு நடக்கவில்லை என்று அர்த்தமா. நீங்கள் ஏன் ஒருதலைபட்சமாக இருக்கிறீர்கள்'' என்று கண்டித்துள்ளார்.


Next Story