விரைவில் மாநாடு - 2ம் பாகம்...? வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்


விரைவில் மாநாடு - 2ம் பாகம்...? வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்
x

மாநாடு திரைப்படத்தின் 2ம் பாகம் குறித்து வெங்கட் பிரபு வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.

சென்னை,

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாநாடு'. இந்த திரைப்படம் தொடர் தோல்வி படங்களால் துவண்டு இருந்த சிம்புவிற்கு திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. வசூல் ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய சாதனை படைத்தது. மேலும் இந்த படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பலரின் பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில் மாநாடு திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதனை தெரிவிக்கும் விதமாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இயக்குனர் வெங்கட் பிரபு படம் குறித்து நெகிழ்ச்சி பதிவை பதிவிட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் படம் உருவான விதம் குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அவர் அதில், 'இரண்டு வருட முடிவில்லா காதல் மற்றும் கொண்டாட்டங்கள். இந்த டைம் லூப்பில் மீண்டும் ஒருமுறை வருவது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. இந்த தலைசிறந்த படைப்பை உருவாக்குவதில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி' என்று பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவிற்கு இயக்குனர் வெங்கட் பிரபு 'லூப் தொடர்கிறது' என்று பதிலளித்திருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் 'மாநாடு' படத்தின் 2 பாகம் உருவாகிறதா? என்று தொடர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


Next Story