மணிப்பூர் நிர்வாண வீடியோ: தொடர்ந்து கொந்தளித்து வரும் நடிகர்-நடிகைகள்..!


மணிப்பூர் நிர்வாண வீடியோ: தொடர்ந்து கொந்தளித்து வரும் நடிகர்-நடிகைகள்..!
x

நடிகர்-நடிகைகள் தொடர்ந்து தங்களின் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்

மணிப்பூர் மாநில கலவரத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை சிலர் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை குஷ்பு, அக்ஷய் குமார் உள்ளிட்டோர் கண்டித்த நிலையில் மேலும் நடிகர்-நடிகைகள் தொடர்ந்து தங்களின் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "மணிப்பூர் சகோதரிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மனித வரலாற்றில் பேரவலம். மன்னிக்க முடியாத பெருங்குற்றம். கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே'' என பதிவிட்டுள்ளார்.

நடிகை ராஷ்மிகாவின் பதிவில், "மணிப்பூரில் நடந்துள்ள சம்பவத்தை நம்பவே முடியவில்லை. மனம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த உலகில் என்னதான் நடக்கிறது? குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.

நடிகை ரகுல் பிரீத் சிங் "மணிப்பூர் வீடியோ காட்சிகள் கவலை அளிக்கிறது. இது மனிதநேயத்துக்கு அவமானமான செயல். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கும் என்று நம்புகிறேன். பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்'' என்று பதிவு வெளியிட்டுள்ளார்.

நடிகை கஸ்தூரியின் பதிவில், "ஜனநாயகம் மனிதர்களுக்கானது மிருகங்களுக்கானது அல்ல. இந்த அரக்கர்கள் மிருகங்களைவிட மோசமானவர்கள். அவர்களுக்கு இதயமே இல்லையா? அவர்களுக்கு தாய் இல்லையா?" என்று கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், "தெய்வம் என்பார் பெண்களை; தேவி என்பார் பூமியை; கடவுளின் பாகம் என்பார் பார்வதியை. நடைமுறையில் உடல் உரிப்பு செய்து ஊர்வலம் விடுவார். நம் தலையில் அல்ல காட்டுமிராண்டிகளின் தலையில் அடிக்க வேண்டும். அநியாயங்களை நிறுத்துங்கள்; அதிகாரம் உள்ளவர்கள் களமிறங்குங்கள். இன்னும் மணிப்பூர் இந்தியாவில்தான் இருக்கிறது'' எனக் குறிப்பிட்டு உள்ளார்.


Next Story