கேரளாவை விட தமிழகத்தில் அதிக வசூல் சாதனை படைக்கும் மஞ்சுமெல் பாய்ஸ்


கேரளாவை விட தமிழகத்தில் அதிக வசூல் சாதனை படைக்கும் மஞ்சுமெல் பாய்ஸ்
x
தினத்தந்தி 4 March 2024 6:30 AM GMT (Updated: 4 March 2024 7:27 AM GMT)

கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி இந்த படம் வெளியாகி உள்ளது.

சென்னை,

பறவ பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ளது மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம். இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி பிப்.23 ம் தேதி வெளியான இப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இணையாக டிக்கெட் விற்பனை நிகழ்ந்து வருவதால் இந்தாண்டின் வசூல் சாதனை படங்களில் ஒன்றாக மஞ்சுமெல் பாய்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை உலகளவில் ரூ.75 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படம் விரைவில் ரூ.100 கோடியை எட்ட உள்ளது.

இந்த நிலையில், இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததுடன் 300 திரைகளில் திரையிடப்பட்டுள்ளது. இதுவரை, தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்கிற சாதனையை படைத்திருக்கிறது மஞ்சுமெல் பாய்ஸ்.

இந்த படத்தின் கதை கரு ஒரு உண்மை சம்பவம் ஆகும். கேரளாவிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்து குணா குகைக்குள் கால் தவறி விழுந்த நண்பனை உயிருடன் மீட்டு காப்பாற்றி அவரை மீண்டும் கேரளாவுக்கு அழைத்துச் செல்வதுதான் இந்த படத்தின் கதைகளமாகும். இந்த குணா குகை குறித்து 32 ஆண்டுகள் கழித்து மற்றொரு படம் வெளியான நிலையில் குணா குகைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகிறார்கள்.


Next Story