மிக்ஜம் புயல் பாதிப்பு: முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் வடிவேலு ரூ.6 லட்சம் நிதியுதவி


மிக்ஜம் புயல் பாதிப்பு: முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் வடிவேலு ரூ.6 லட்சம் நிதியுதவி
x

பல்வேறு திரைப்பிரபலங்கள் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும் அனைத்து சட்டசபை, நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறும் கூறியிருந்தார். அதன்படி, அனைத்து திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் நகைச்சுவை நடிகர் வடிவேலு ரூ.6 லட்சத்துக்கான காசோலையை இன்று அமைச்சர் உதயநிதியை நேரில் சந்தித்து வழங்கினார்.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், 'மிக்ஜம் புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க, கழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், அரசின் மீட்பு - நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், 'முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு திரைக்கலைஞர் அண்ணன் வடிவேலு அவர்கள் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்' என்று பதிவிட்டுள்ளார்.


Next Story