ஆந்திராவில் தியேட்டர் ஒதுக்க எதிர்ப்பு... விஜய்யின் 'வாரிசு' பட விவகாரத்தில் முடிவு எடுக்க பட அதிபர்கள் கூட்டம்


ஆந்திராவில் தியேட்டர் ஒதுக்க எதிர்ப்பு... விஜய்யின் வாரிசு பட விவகாரத்தில் முடிவு எடுக்க பட அதிபர்கள் கூட்டம்
x

விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கு ஆந்திராவில் தியேட்டர் ஒதுக்க எதிர்ப்புகள் வந்தன. இந்த பிரச்சனை குறித்து ஆலோசிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம் வருகிற 23-ந்தேதி சென்னையில் கூடுகிறது.

விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்களில் வாரிசு வெளியாக உள்ளது. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார். விஜய்க்கு தெலுங்கிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். இதனால் வாரிசு படத்தை ஆந்திரா, தெலுங்கானாவிலும் கூடுதல் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டு உள்ளனர். இதற்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் எதிப்பு தெரிவித்து உள்ளது. பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தியேட்டர் அதிபர்களை வற்புறுத்தி உள்ளது. இதனால் பொங்கலுக்கு வெளியாகும் சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா, பாலகிருஷ்ணா நடித்துள்ள வீர நரசிம்ம ரெட்டி, அகில் நடித்துள்ள ஏஜெண்ட் ஆகிய 3 படங்களுக்கு மட்டுமே கூடுதல் தியேட்டர்கள் கிடைக்கும் நிலைமை உள்ளது. வாரிசு படத்துக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவுக்கு தமிழ் திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். பதிலடியாக தெலுங்கு படங்களுக்கு தமிழகத்தில் தியேட்டர்கள் ஒதுக்க கூடாது என்றும் வற்புறுத்தி உள்ளனர். இந்த பிரச்சினை குறித்து ஆலோசிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம் வருகிற 23-ந்தேதி சென்னையில் கூடுகிறது. இதில் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவை கண்டித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.


Next Story