விஜய்க்காக 10 ஆயிரம் வரிகளில் கவிதை: உலக சாதனை படைத்த தீவிர ரசிகர்


விஜய்க்காக 10 ஆயிரம் வரிகளில் கவிதை: உலக சாதனை படைத்த தீவிர ரசிகர்
x
தினத்தந்தி 21 April 2024 3:56 AM GMT (Updated: 21 April 2024 6:10 AM GMT)

தீவிர விஜய் ரசிகரான இவர், கடந்த 16-ஆம் தேதி நடிகர் விஜய்க்காக 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகளுடன் முழு கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

சென்னை,

நடிகர் விஜய் திரையுலகில் ஒரு தவிர்க்க முடியாத நடிகர். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். எந்த அளவிற்கு வெறித்தனம் என்பது சமீபத்தில் விஜய் கேரளா சென்றபோது நடந்த சம்பவங்களே கூறியிருக்கும். விஜய்க்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் அளவிற்கு அவரின் தீவிரமான ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பிய கில்லி படம் நேற்று தமிழகம் முழுவதும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது முன்பை விட அதிக வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், இதே நாளில் விஜய் ரசிகர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ள சம்பவமும் அரங்கேறியுள்ளது.

அதன்படி திருப்பத்தூரை சேர்ந்த கதிர் (30) என்ற இளைஞர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராக உள்ளார். இவர் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் இயங்கி வரும் யுனிவர்சல் அச்சீவர் புக் ஆப் ரெக்கார்ட் மற்றும் ப்யூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட் ஆகிய நிறுவனங்களின் தலைமையில் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அதாவது கடந்த 16-ம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கி 17-ம் தேதி இரவு 11 மணி வரை மொத்தமாக 36 மணி நேரத்தில் சுமார் 10 ஆயிரம் வரிகள் அடங்கிய ஒரு முழு கவிதையை எழுதி உலக சாதனை படைத்துள்ளார். நடிகர் விஜய்க்காக கவிதை எழுதி சாதனை படைத்த கதிருக்கு இரண்டு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.


Next Story