படப்பிடிப்பின் போது விபத்து நடிகர் பிருத்விராஜ் காலில் காயம்; இன்று அறுவை சிகிச்சை


படப்பிடிப்பின் போது விபத்து நடிகர் பிருத்விராஜ் காலில் காயம்; இன்று அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 26 Jun 2023 5:46 AM GMT (Updated: 26 Jun 2023 1:56 PM GMT)

விளையாத் புத்தா திரைப்படத்தை ஜெயன் நம்பியார் என்பவர் இயக்கி வருகிறார்.

இடுக்கி

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிருத்விராஜ், பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் தற்போது விளையாத் புத்தா என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது.

இது மறைந்த மலையாள இயக்குனர் சாச்சியின் கனவு திரைப்படமாகும். ஏற்கனவே சாச்சி இயக்கத்தில் அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தில் நடித்திருந்த பிருத்விராஜ், தற்போது அவரின் கனவு திரைப்படமான விளையாட்டு புத்தா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

விளையாத் புத்தா திரைப்படத்தை ஜெயன் நம்பியார் என்பவர் இயக்கி வருகிறார். இந்து கோபனின் விளையாத் புத்தர் நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.இது சந்தனம்மரக்கடத்தல் குறித்த படம். இப்படத்தின் படப்பிடிப்பு இடுக்கு மாவட்டம் தேவிகுளம் தாலுகா மரையூரில் நடைபெற்று வருகிறது. 50 நாட்களுக்கு மேலாக அப்பகுதியில் நடைபெற்று வந்த படபிடிப்பில் நடிகர் பிருத்விராஜும் கலந்துகொண்டு நடித்து வந்தார். இந்த நிலையில், நேற்று வழக்கம்போல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அதில் நடிகர் பிருத்விராஜ் அந்தரத்தில் பறந்தபடி சண்டையிடுவது போன்ற சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது.

இதற்காக ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு இந்த காட்சி எடுக்கப்பட்டது. இந்த காட்சியில் டூப் எதுவும் போடாமல் நடிகர் பிருத்விராஜ் ரிஸ்க் எடுத்து நடித்தார். இதில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் நடிகர் பிருத்விராஜுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து வலியால் துடித்த நடிகர் பிருத்விராஜை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்யவும் அறிவுறுத்தி உள்ளார்களாம்.இதை தொடர்ந்து அவருக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.

அறுவை சிகிச்சை செய்தால் குறைந்தது 2 மாதங்களாவது ரெஸ்ட் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி உள்ளார்களாம். இதனால் விளையாத் புத்தா படத்தின் படப்பிடிப்பு பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. நடிகர் பிருத்விராஜ் விரைவில் குணமடைய வேண்டி அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Next Story