ராணுவ வீரர்களுடன் ரஜினிகாந்த் சந்திப்பு...!


ராணுவ வீரர்களுடன் ரஜினிகாந்த் சந்திப்பு...!
x

ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் ரஜினிகாந்த் கலந்துரையாடினார்

இமயமலைக்கு ஆன்மிக யாத்திரையாக சென்ற ரஜினிகாந்த், அங்குள்ள புண்ணிய தலங்களுக்கு சென்றார். பாபாஜி மற்றும் அவரது சீடர்களின் ஆசிரமத்துக்கும் சென்று மதகுருமார்களிடம் ஆசி பெற்றார்.

இதற்கிடையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். அதனைத்தொடர்ந்து சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசினார். பின்னர் அயோத்திக்கு சென்ற அவர் அனுமன்கர்கி கோவிலுக்கு சென்று வழிபட்டார். ராமர் கோவில் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார். ரஜினிகாந்தின் மனைவி லதாவும் உடன் சென்றார்.

இந்தநிலையில் லக்னோவில் ராணுவ அதிகாரிகளை, ரஜினிகாந்த் நேற்று சந்தித்தார். இந்திய ராணுவத்தின் முதன்மை கமாண்டிங் அதிகாரி லெப்டினெண்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி, ரஜினிகாந்தை வரவேற்றார். பின்னர் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் ரஜினிகாந்த் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின்போது, 'நாட்டுக்கு சேவையாற்றும் ராணுவ வீரர்களின் சேவை அளப்பரியது' என்று கூறி, ராணுவ வீரர்களை பெருமையுடன் ரஜினிகாந்த் பாராட்டினார். முன்னதாக ரஜினிகாந்துடன், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

'ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக பாராட்டும் தெரிவித்தனர்.


Next Story