தினசரி 15 பேரால் பாலியல் பலாத்காரம்... நடிகை அதா சர்மா அதிரடி பேட்டி


தினசரி 15 பேரால் பாலியல் பலாத்காரம்... நடிகை அதா சர்மா அதிரடி பேட்டி
x

தினசரி 15 பேர் பலாத்காரம் செய்யும்போது என்ன சான்று தர முடியும்? என தி கேரளா ஸ்டோரி பட புகழ் நடிகை அதா சர்மா பேட்டியில் அதிரடியாக கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்,

தி கேரளா ஸ்டோரி படம் வெளிவருவதற்கு முன் அதன் டிரைலர் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்னும் மெயின் பிக்சரே வரவில்லை. அதற்குள் இப்படியா? என்ற வகையில் பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

டிரைலரில், கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போய், பின்னர் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைந்தனர் என்று காட்சிகள் அமைந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

படம் சட்டரீதியாக சில விசயங்களை எதிர்கொண்டு, அதனால் படத்தின் டிரைலர் ஆனது 32 ஆயிரம் பெண்களை பற்றிய விசயம் என்பதில் இருந்து, பட காட்சிகளில் தோன்ற கூடிய 3 பெண்களை பற்றியது என மாற்றும் கட்டாயத்திற்கு ஆளானது.

இந்த படத்தில் அவர்கள் 3 பேரையும் லவ் ஜிகாத் என்ற பெயரில் மோசடி செய்து, பின்னர் கர்ப்பமடைய செய்து, அதன்பின் ஈராக் மற்றும் சிரியாவுக்கு நாடு கடத்தி, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைய செய்த விவரங்களை படம் உள்ளடக்கி உள்ளது.

திரைப்படத்தில் நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களையேற்று நடித்து உள்ளனர். நாட்டில் வெறுப்பை பரப்பும் நோக்கோடு படம் அமைந்து உள்ளது என்று பல்வேறு அரசியல் தலைவர்களும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

படம் வெளியானதும், கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது. கேரளாவிலேயே பல திரையரங்குகள் பட வெளியீட்டுக்கு முன்வரவில்லை. தமிழகத்திலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மேற்கு வங்காள அரசு படத்திற்கு தடை விதித்தது.

சட்டம் மற்றும் ஒழுங்கு நிலையை பராமரிக்கவே இந்த முடிவு என தெரிவிக்கப்பட்டது. எனினும், சுப்ரீம் கோர்ட்டு அந்த தடைக்கு இடைக்கால தடை விதித்து இன்று உத்தரவிட்டது.

இந்நிலையில், நடிகை அதா சர்மா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும்போது, படத்தின் மீது நீங்கள் அன்பும், ஆதரவும் காட்டி இருக்கிறீர்கள். தற்போது, கட்டாய மதமாற்றத்தில் பாதிக்கப்பட்டு, உண்மையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த இளம்பெண்களின் பின்னணியை பற்றி கவனித்து கேளுங்கள். அவர்களை பாராட்டுங்கள் என பேசியுள்ளார். இதில், சிக்கி இரையான பெண்களின் எண்ணிக்கைக்கு மக்கள் சான்று கேட்கின்றனர்.

ஓராண்டில் பல முறை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்களால் எப்படி சான்று தர முடியும் என கேட்டுள்ளார். அப்போது, படத்தில் வரும் நிமா என்ற பெண்ணின் வேடம் பற்றி குறிப்பிட்ட அவர், அவர் தினசரி 15 முதல் 20 பேரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறார். அதற்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முற்படுகிறார். அதற்கு அவர்கள் சான்று கேட்கின்றனர்.

இதுபற்றி சர்மா கூறும்போது, 15 பேர் ஒரு மாதத்திற்கு தொடர்ச்சியாக உங்களை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள் என்றால், நீங்கள் என்ன சான்று தருவீர்கள்? ஷாலினி (சர்மாவின் வேடம்) காதலில் துரோகத்திற்கு ஆளாகிறாள். காதலில் துரோகம் செய்யப்பட்டதற்கு எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும்? என கேட்டு உள்ளார்.

இந்த படத்தின் தயாரிப்பாளர்கள், கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள ஆர்ஷா வித்யா சமாஜம் ஆசிரமத்தில் உள்ள 26 இளம்பெண்களை அழைத்து வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கட்டாய மதமாற்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் ஊடகத்தின் முன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

படத்தின் லாபத்தில் ரூ.51 லட்சம் தொகையை, நன்கொடையாக ஆசிரமத்தில் உள்ள பெண்களின் கல்வி, வாழ்க்கை மேம்பாட்டுக்கான உதவியாக வழங்கியுள்ளனர்.


Next Story