ருத்ரன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் - ஐகோர்ட்டு உத்தரவு


ருத்ரன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் - ஐகோர்ட்டு உத்தரவு
x

‘ருத்ரன்’ படத்தை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'ஜிகர்தண்டா' உட்பட பல படங்களைத் தயாரித்தவர் ஆவார்.

இந்த படத்தின் இந்தி உள்ளிட்ட வடமொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்சா என்ற நிறுவனம் பெற்றிருந்தது. டப்பிங் உரிமைக்காக ரூ.12.25 கோடிக்கு பட தயாரிப்பு நிறுவனத்துடன் அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. இதற்காக முன்பணமாக ரூ.10 கோடி செலுத்தியதாக சொல்லப்படுகிறது.

இருப்பினும் மேலும் ரூ.4.5 கோடி கேட்டு ஒப்பந்தத்தை தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்ததாக, ரெவன்சா நிறுவனத்தின் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு ருத்ரன் திரைப்படத்தை ஏப்ரல் 24 ஆம் தேதி வரை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த தடையை நீக்கக்கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனமான பைவ் ஸ்டார் நிறுவனம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, படத்தின் இந்தி மற்றும் பிற வடமொழிகளின் டப்பிங் உரிமையை வேறு யாருக்கும் வழங்கக் கூடாது என்றும், இந்த பிரச்சினையை மத்தியஸ்தர் மூலமாக தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து டப்பிங் உரிமை குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படாது என தயாரிப்பாளர் தரப்பு உத்தரவாதம் அளித்ததை ஏற்று, 'ருத்ரன்' படத்தை திரையரங்கம், ஓ.டி.டி. மற்றும் சாட்டிலைட் ஆகியவற்றில் வெளியிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் திட்டமிட்டபடி 'ருத்ரன்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




Next Story