சர்ச்சை படங்களுக்காக ரூ.25 கோடி அபராதம் விதிப்பா...? நடிகர் பிருத்விராஜ் விளக்கம்


சர்ச்சை படங்களுக்காக ரூ.25 கோடி அபராதம் விதிப்பா...? நடிகர் பிருத்விராஜ் விளக்கம்
x

சர்ச்சைக்குரிய படங்களுக்காக அமலாக்க துறை ரூ.25 கோடி அபராதம் விதித்தது என்ற தகவலுக்கு நடிகர் பிருத்விராஜ் விளக்கம் அளித்து உள்ளார்.

கொல்லம்,

நடிகர், இயக்குநர் மற்றும் பாடகர் என்ற பல பரிமாணங்களை கொண்டவர் நடிகர் பிருத்விராஜ். மலையாள திரையுலகில் இருந்து வந்த அவர் தமிழிலும் பல்வேறு படங்களில் நடித்து, தனதுதிறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

சமீபத்தில் மருநாடன் மலயாளி என்ற பெயரிலான யூடியூப் சேனலில் இவரை பற்றிய செய்தி ஒன்று பரவியது. அதில், இன்றைய தேதியிட்டு (மே 11) வெளிவந்து உள்ள செய்தியில், சர்ச்சைக்குரிய படங்களை எடுத்ததற்காக, அமலாக்க துறை நடிகர் பிருத்விராஜை ரூ.25 கோடி அபராதம் கட்டும்படி, கட்டடாயப்படுத்தி உள்ளது என கூறப்பட்டது.

இந்த தகவல் பொய்யானது என பிருத்விராஜ் மறுத்திருக்கிறார். அபராதம் எதுவும் கட்டவில்லை என மறுப்பு தெரிவித்துள்ள அவர், அவதூறு ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை பரப்பும் வலைதளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போகிறேன் என்றும் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்து உள்ளார்.

அனைத்து பொறுப்புள்ள ஊடகங்களும், உண்மையான விசயங்களை ஆய்வு மற்றும் உறுதி செய்த பின்னர் வெளியிடும்படி வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

பொதுவாக இதுபோன்ற விசயங்களை கண்டுகொள்ளாமல் இருந்து விடுவேன் என தெரிவித்து உள்ள அவர், ஆனால் செய்தி என்ற பெயரில் முழுவதும் பொய்யான ஒன்றை பரப்புவதற்கும் ஓர் எல்லை உள்ளது என சாடியுள்ளார்.

தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். இவர் தற்போது ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் பிளஸ்சி இயக்கி உள்ள இந்த படம் பெஞ்சமினின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.

ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு ஓட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞன் பற்றிய கதையே இந்த படம். பிருத்விராஜ் ஒட்டகம் மேய்ப்பவராக நடித்து இருக்கிறார்.

இதன் படப்பிடிப்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே தொடங்கி பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு சமீபத்தில் முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜோர்டான் மற்றும் சஹாரா மற்றும் அல்ஜீரியாவில் படமாக்கப்பட்டது. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளிவந்தது. அதன் காட்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் இருந்தன.


Next Story