அவதூறு பேச்சு - நடிகை திரிஷா எச்சரிக்கை


அவதூறு பேச்சு - நடிகை திரிஷா எச்சரிக்கை
x
தினத்தந்தி 20 Feb 2024 12:43 PM GMT (Updated: 20 Feb 2024 1:40 PM GMT)

கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்பு படுத்தி பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுக்கு நடிகை திரிஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சையானது. அதில், "கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார். ஏ.வி.ராஜுவின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில், கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசியதற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: கவனம் பெறுவதற்காக சிலர் தரக்குறைவாக பேசுவது அருவருக்கத்தக்க வகையில் உள்ளது. தன்னைப்பற்றி அவதூறாக பேசியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இனி இவ்விவகாரம் தொடர்பாக எனது சட்ட ஆலோசகரே பேசுவார்.

என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story