'பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று' - பவதாரிணி மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்


பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று - பவதாரிணி மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்
x

பின்னணி பாடகி பவதாரிணி (வயது 47) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

சென்னை,

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி. பின்னணி பாடகியான இவர் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி, இதற்காக கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, ஆயுர்வேத சிகிச்சைக்காக பவதாரிணி இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் தொடர் சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து நேற்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 47.

இலங்கையில் தனியார் வைத்தியசாலையில் இருந்து கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பவதாரிணி உடல் கொண்டு செல்லப்பட்டது. முழுவதும் மூடப்பட்ட பெட்டியில் பவதாரிணி உடல் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு பவதாரிணியின் உடல் இன்று மாலை சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

இந்நிலையில் பவதாரிணி மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அவர் அந்த பதிவில், 'மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவை தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன்.

பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல்' என பதிவிட்டு உள்ளார்.


Next Story