மம்முட்டி படம் மீது கதை திருட்டு புகார்


மம்முட்டி படம் மீது கதை திருட்டு புகார்
x

மலையாளத்தில் மம்முட்டி நடித்த 'நண்பகல் நேரத்து மயக்கம்' திரைப்படம் திரையரங்குகளைத் தொடர்ந்து ஓ.டி.டி. தளத்திலும் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு தனது 'ஏலே' பட காட்சிகளை திருடி இருப்பதாக பெண் டைரக்டர் ஹலிதா ஷமீம் குற்றம் சாட்டி உள்ளார். இவர் தமிழில் சில்லுக்கருப்பட்டி, பூவரசம் பீப்பி ஆகிய படங்களையும் டைரக்டு செய்துள்ளார். ஏலே படத்தில் சமுத்திரக்கனி நடித்து இருந்தார்.

ஹலிதா ஷமீம் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், "ஏலே படத்திற்காக முதன் முதலில் ஒரு கிராமத்து மக்களை படப்பிடிப்பிற்கு தயார் செய்து அதில் அவர்களையும் நடிக்கவைத்தோம். அதே கிராமத்தில் நண்பகல் நேரத்து மயக்கம் படமாக்கப்பட்டது மகிழ்ச்சியே. இருப்பினும் நான் பார்த்து, பார்த்து சேர்த்த அழகியல் யாவும் இப்படம் முழுக்க களவாடப்பட்டு உள்ளது.

ஐஸ்காரர் என்றால் இங்கே பால்காரர். செம்புலி இங்கே செவலை. அங்கே அமரர் ஊர்தி பின்னே செம்புலி ஓடியது போல், இங்கே மினி பஸ் பின்னே செவலை ஓடுகிறது. ஏலே படத்தில் நடித்த கலைக்குழு பாடகர் பாத்திரம் போலவே, நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் மம்முட்டியுடன் பாடிக் கொண்டிருக்கிறார். இரண்டு படங்களையும் ஒப்பிட்டு சொல்வதற்கு இன்னும் நிறைய உள்ளன.

நான் தேர்வு செய்த அழகியல் இரக்கமின்றி திருடப்படும்போது அமைதியாக இருக்கமாட்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


Next Story