தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
x

விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் காலக் கெடுவை நீட்டித்து வழங்க வேண்டும் என்று திரையுலகத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

சென்னை:

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் சார்பில் 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை திரைப்பட விருதுகள், 2018 முதல் 2022-ம் ஆண்டுவரை குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ் திரைப்படங்களுக்கு அரசு மானியம் மற்றும் 2015 முதல் 2022-ம் ஆண்டு வரை சின்னத்திரை விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் 24-ந்தேதி முதல் வருகிற 8-ந்தேதி மாலை 5 மணி வரை பெறப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த காலக் கெடுவை நீட்டித்து வழங்க வேண்டும் என்று திரையுலகத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதனை அரசு கனிவுடன் பரிசீலனை செய்து விண்ணப்பங்கள் பெறப்படும் கடைசி நாளை வருகிற 31-ந்தேதி அன்று மாலை 5 மணி வரை நீட்டித்துள்ளது.

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், "உறுப்பினர்-செயலாளர், திரைப்படத் துறையினர் நலவாரியம், முதல் தளம் மாநில செய்தி நிலையம், கலைவாணர் அரங்க வளாகம், சென்னை" என்ற முகவரியில் வருகிற 31-ந்தேதி அன்று மாலை 5 மணி வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து) பெறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story