என்னால் மறக்க முடியாத படம் 'ஒன்பது ரூபாய் நோட்டு' - நடிகர் சத்யராஜ் நெகிழ்ச்சி


என்னால் மறக்க முடியாத படம் ஒன்பது ரூபாய் நோட்டு - நடிகர் சத்யராஜ் நெகிழ்ச்சி
x

தங்கர் பச்சான் இயக்கிய ஒன்பது ரூபாய் நோட்டு படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதையொட்டி அதில் நடித்துள்ள சத்யராஜ் நெகிழ்ச்சியோடு பேசும்போது,

''ஒன்பது ரூபாய் நோட்டு படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகிவிட்டன. என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் இது. அதில் நான் நடிக்கவில்லை, வாழ்ந்து இருந்தேன் என்றார். எனது கதாபாத்திரத்தில் நான் நடிக்காமல் வாழ வைத்தது அந்த படத்தின் டைரக்டர் தங்கர் பச்சான். அவர் சிறந்த சிந்தனையாளர். படைப்பாளி. அவருக்குள் வாழ்ந்த அந்த கதாபாத்திரத்தை என் மூலம் வாழவைத்தார். போலித்தனம் இல்லாத படைப்பு. இந்த அற்புதமான படத்தில் நான் நடித்தது பாக்கியம்" என்றார்.

தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''2007-ம் ஆண்டில் 'ஒன்பது ரூபாய் நோட்டு' திரைப்படமாக வடிவம் கொண்டது. எந்த ஒரு சிறந்த படைப்பும் அதற்கு தேவையானவைகளைத்தானே தகவமைத்துக்கொள்ளும் என்பதை பலமுறை பட்டறிந்திருக்கிறேன். சத்யராஜ், அர்ச்சனா, நாசர், ரோகினி, நடன இயக்குனர் சிவசங்கர் என அனைவரும் இந்த பாத்திரங்களாகவே எக்காலத்துக்கும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இவ்வாறான நம் மண் சார்ந்த படைப்புகளை என் உயிர் உள்ளவரை படைக்க வேண்டும் என்பதே என் பெரு விருப்பம்" என்று கூறியுள்ளார்.


Next Story