``நாயகிகளை முதன்மைப்படுத்தும் படங்கள் அதிகம் வரவேண்டும்'' - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்


``நாயகிகளை முதன்மைப்படுத்தும் படங்கள் அதிகம் வரவேண்டும் - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
x

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் முக்கிய இடத்தை பிடித்துள்ளார், ஐஸ்வர்யா ராஜேஷ். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள சவாலான கதைகளில் திறமையாக நடிக்க முடியும் என்றும் நிரூபித்து இருக்கிறார். அடுத்து அவரது நடிப்பில் திரைக்கு வர உள்ள `பர்ஹானா' படத்துக்கும் எதிர்பார்ப்பு உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்துள்ள பேட்டியில் இருந்து..

கேள்வி:- தொடர்ச்சியாக அழுத்தமான கதைகள், பெண்களை மையமாகக் கொண்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறீர்களே ?

பதில்:- அப்படியெல்லாம் எதுவும் முடிவெடுத்து செய்யல, எனக்கு வர்ற கதைகளை கேட்கிறேன். அந்த கதையில என்ன இருக்கு, படம் எப்படி வரும்.. மக்கள்கிட்ட எப்படி போய் சேரும்னு யோசிப்பேன். இப்ப இந்தியன் கிச்சன் பண்ணினேன். படத்த பத்தி, இந்தி டைரக்டர் பாராட்டினாரு.

என் வீட்ல நானே இப்படித்தான் பண்றேன்.. அந்தப்படம் என்ன பாதிச்சதுனு சொன்னாரு. ரொம்ப சந்தோஷமா இருந்தது. அது தான் முக்கியம். ஒரு படம் என்ன பாதிப்ப தருதுங்கறது தான் எப்பவும் முக்கியமானது.

கேள்வி:- சோகமான பெண் பாத்திர கதைகள் பண்றீங்களே ?

பதில்:- என்னங்க பண்றது. எனக்கு வர்ற கதைகள் அப்படி. அதுல பிடிச்ச கதைகள் மட்டும்தான் தேர்ந் தெடுத்து பண்றேன்.

கேள்வி:- என்ன மாதிரியான படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்?

பதில்:- எனக்கும் ஹீரோ கூட டூயட் பாடுற படங்கள், காமெடி மசாலா பண்ண ஆசை. ஆனா என்னை யாரும் அந்த கதாபாத்திரங்களுக்கு கூப்பிடறதில்ல. இப்ப பர்ஹானா, இனிமே இன்னும் வித்தியாசமா கதைகள் பண்ணுவேன்.

கதாநாயகிகளை முதன்மைப்படுத்தி நிறைய படங்கள் வரவேண்டும். பெண்கள வச்சு நிறைய கதைகள் சொல்ல வேண்டியது இருக்கு. அது ரொம்ப அவசியமும் கூட. இப்ப ஹீரோயின் செண்ட்ரிக் படங்களுக்குனு ஒரு மார்க்கெட் இருக்கு. என்னை மட்டும் சொல்லல, நயன்தாரா, திரிஷா, சாய் பல்லவி எல்லாம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் சிறப்பாக நடிக்கிறார்கள். பணத்துக்காக மட்டுமில்லாம இந்த மாதிரி கதைகளில் நடிப்பது கடமைனு நினைக்கிறேன்.

கேள்வி:- உங்களுக்கு காதல் இருக்கா? கல்யாணம் எப்போ?

பதில்:- இது ஒரு ஹீரோயின் கிட்ட கேட்கக்கூடாத கேள்வி. இப்போதைக்கு காதல், கல்யாணம் எல்லாமே சினிமா தான். மக்களுக்கு பிடிக்கிற மாதிரி நல்ல படங்கள் பண்ணனும் அவ்வளவு தான்.

கேள்வி:- உங்களுடைய டிரீம் கேரக்டர் என்ன?

பதில்:- எனக்கு வாரியர் பிரின்ஸஸ் மாதிரி ஒரு கேரக்டர் பண்ணனும். அப்புறம் முழுக்க முழுக்க ஒரு படத்துல வில்லியா நடிக்கனும். அம்மன் கேரக்டர் பண்ணனும். இதெல்லாம் என்னோட ஆசை. பார்க்கலாம்.

கேள்வி:- பர்ஹானா படம் பற்றி சொல்லுங்கள்?

பதில்:- நெல்சன் வெங்கடேசன் அட்டகாசமான திரைக்கதை பண்ணிருக்காரு. கண்டிப்பா இந்தக்கதை புதுசா இருக்கும். பெண்கள் தினம் தினம் சந்திக்கிற பிரச்சனைய இந்தப்படம் பேசும். பர்ஹானா எல்லோருக்கும் பிடிக்கும். அந்த நம்பிக்கை இருக்கு. படத்தில் சர்ச்சை எதுவும் இல்லை.

வீட்டுக்குள்ளே இருக்கிற பெண் வெளியுலகத்துல வேலைக்கு போனால் என்ன ஆகும்ங்கிறதுதான் கதை.


Next Story