'தங்கலான் படம் சிறப்பாக முழுமையடைய விக்ரம் சார் தான் காரணம்' - இயக்குனர் பா.இரஞ்சித்


தங்கலான் படம் சிறப்பாக முழுமையடைய விக்ரம் சார் தான் காரணம் - இயக்குனர் பா.இரஞ்சித்
x

'தங்கலான்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

சென்னை,

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. நேற்று நடைபெற்ற தங்கலான்' டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பா.இரஞ்சித் பேசியதாவது,

'விக்ரம் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். கலை நயமான நடிகர். பொதுவாக கதாபாத்திரங்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று வரைந்து கொடுப்போம். அப்படி நான் சில புகைப்படக்களை மட்டும் தான் விக்ரம் சாரிடம் எடுத்து கொடுத்தேன். படப்பிடிப்பு தளத்திற்கு அவர் புகைப்படத்தில் இருக்கும் ஆளாக மாறி வந்துவிட்டார்.

நான் சினிமா எடுக்கும் போது பயங்கர சுயநலவாதி, ஆனால் நான் அதை காட்டிக்கொள்ளமாட்டேன். யாரையும் கஷ்டப்படுத்தாமல் வேலை வாங்க வேண்டும் என்று முயற்சி செய்வேன். விக்ரம் சார் ஒருநாள் காலையில் ஆரம்பித்து நான்கு மணிவரை நடித்துக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

ஒரு கதாபாத்திரத்தை உண்மையாக காட்டுவதற்கு ஒரு நடிகர் இவ்வளவு மெனக்கெட வேண்டும் என்றால் கதாபாத்திரத்தை அந்த நடிகர் எவ்வளவு நம்பி இருப்பார். அந்த நம்பிக்கை எனக்கு ஒரு பெரிய உத்வேகத்தை கொடுத்தது. அதனால் தான் தங்கலான் முழுமையடைந்துள்ளது. தங்கலான் படம் சிறப்பாக முழுமையடைய விக்ரம் சார் தான் காரணம். அதுதான் என்னை இன்னும் இந்த படத்தில் நல்ல வேலை செய்ய உதவியது' என்று பேசினார்.


Next Story