வலைத்தள தொடர் விவகாரம்; தயாரிப்பாளர் ஏக்தா கபூர், தாயாருக்கு கைது வாரண்ட் பிறப்பிப்பு


வலைத்தள தொடர் விவகாரம்; தயாரிப்பாளர் ஏக்தா கபூர், தாயாருக்கு கைது வாரண்ட் பிறப்பிப்பு
x

ராணுவ வீரர்கள், குடும்பத்தினரின் உணர்வுகளை புண்படுத்தி விட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் தயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.



பெகுசராய்,



பிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளரான ஏக்தா கபூர், வலைத்தள தொடர் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இதன்படி எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ். சீசன் 2 என்ற பெயரில் வலைதள தொடர் ஒன்றின் தயாரிப்பிலும் அவர் ஈடுபட்டார்.

இதில், மதஉணர்வுகள் புண்படுத்தப்பட்டு உள்ளன. ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளனர் மற்றும் தேசிய சின்னம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுபற்றி இந்தூரில், ஏக்தா கபூர் மற்றும் பிறர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பீகாரின் பெகுசராய் நகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஷாம்பு குமார் என்பவர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

இதேபோன்று, பிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மற்றும் அவரது தாயார் ஷோபா கபூர் ஆகியோருக்கு எதிராக பீகாரின் முசாபர்பூர் கோர்ட்டிலும் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பீகாரின் பெகுசராய் கோர்ட்டு நேரில் ஆஜராகும்படி ஏக்தா கபூர் மற்றும் அவரது தாயார் ஷோபா கபூர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், அவர்கள் இதனை புறக்கணித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்யும்படி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.


Next Story