ராஜாகண்ணு மனைவிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - நடிகர் சூர்யா அதிரடி அறிவிப்பு


ராஜாகண்ணு மனைவிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - நடிகர் சூர்யா அதிரடி அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Nov 2021 5:47 PM GMT (Updated: 15 Nov 2021 5:47 PM GMT)

ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு உதவி செய்ய வேண்டும் என சூர்யாவுக்கு அரசியல் தலைவர் ஒருவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் ‘ஜெய் பீம்’. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு பிரபலங்கள், இப்படத்தை பார்த்து பாராட்டினர்.

சமீபத்தில் இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சூர்யாவுக்கு எழுதிய பாராட்டுக் கடிதத்தில் ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அவருக்கு பதில் அளித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “வணக்கம். தங்களின் வாழ்த்து கடிதம் கிடைக்கப்பெற்றேன். ‘ஜெய்பீம்’ திரைப்படம் குறித்த உளப்பூர்வமான பாராட்டுக்கு மிக்க நன்றிகள். ஏழை எளிய மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது கம்யூனிஸ்ட் இயக்கமும், அந்த தத்துவத்தை வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டவர்களும் எப்போதும் துணை நிற்பதைக் கண்டு நெகிழ்ந்திருக்கிறேன்.

இவ்வழக்கில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான பங்களிப்பை இயன்றவரையில் திரைப்படத்தில் முதன்மைப் படுத்தியிருக்கிறோம். நீதிபதி கே.சந்துரு மற்றும் நேர்மையான காவல்துறை உயரதிகாரி பெருமாள்சாமி ஆகியோரின் பங்களிப்பையும் பதிவு செய்திருக்கிறோம்.

மேலும் மறைந்த ராஜாகண்ணு அவர்களின் துணைவியார் பார்வதி அம்மாள் அவர்களுக்கு ஏதேனும் தொலைநோக்கோடு கூடிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

அவருடைய முதுமை காலத்தில் இனிவரும் வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் வகையில், அவர்களின் பெயரில் 'பத்து இலட்சம்' ரூபாய் தொகையை டெபாசிட் செய்து, அதிலிருந்து வருகிற வட்டி தொகையை மாதந்தோறும், அவர் பெற்றுக் கொள்ள வழி செய்ய முடிவு செய்திருக்கிறோம். அவர் காலத்திற்குப் பிறகு அவருடைய வாரிசுகளுக்கு அத்தொகை போய் சேரும்படி செய்யலாம்.

மேலும் குறவர் பழங்குடி சமூக மாணவர்களின் கல்வி வாய்ப்பிற்கு உதவுவது பற்றியும் ஆலோசித்து வருகிறோம். கல்விதான் வருங்கால தலைமுறையின் முன்னேற்றத்திற்கு நிரந்தர தீர்வு.

ஆகவேதான் 'ஜெய் பீம்' திரைப்படத்தின் மூலம் இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்கு உதவி செய்தோம். மக்களின் மீதான தங்கள் இயக்கத்தின் அக்கறை மிகுந்த செயல்பாடுகளுக்கு மீண்டும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய மக்கள் களப்பணி தொடர மனப்பூர்வமான வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

Next Story