பிரபல சின்னத்திரை நடிகை வீட்டில் கொள்ளை - போலீஸ் விசாரணை


பிரபல சின்னத்திரை நடிகை வீட்டில் கொள்ளை - போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 19 Nov 2021 6:19 PM GMT (Updated: 19 Nov 2021 6:19 PM GMT)

கேரளாவில் பிரபல சின்னத்திரை நடிகை வீட்டில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கண்ணூபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீகலா(வயது24). இவர் கேரள சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானார். மேலும் சினிமாவிலும் சிறு, சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.

இவர் கண்ணூபுரம் பகுதியில் தனது தந்தை மற்றும் தங்கை ஜெயாவுடன் வசித்து வருகிறார். தினமும் வீட்டில் இருந்து படப்படிப்பிடிப்புக்கு செல்வது வழக்கம்.

நேற்று காலை வழக்கம்போல் ஸ்ரீகலா தனது வீட்டில் இருந்து சினிமா படப்பிடிப்புக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் அவரது தந்தையும், தங்கையும் மட்டுமே இருந்தனர். இந்த நிலையில் ஸ்ரீகலாவின் தங்கை தனது தந்தையுடன் பொருட்கள் வாங்குவதற்காக மதியம் அந்த பகுதியில் உள்ள கடைவீதிக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் மாலை 3 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த 2 பேரும் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த அலமாரி திறந்து கிடந்ததுடன், பொருட்களும் ஆங்காங்கே சிதறி கிடந்தன. அலமாரியில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகை திருடு போய் இருந்தது.

இவர்கள் 2 பேரும் வெளியில் சென்றதை நோட்டமிட்ட நபர்கள் வீட்டிற்குள் புகுந்து கதவை உடைத்து, உள்ளே நுழைந்து அலமாரியை உடைத்து, அதில் இருந்த நகையை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சின்னத்திரை நடிகை ஸ்ரீகலாவின் தங்கை ஜெயா கண்ணூபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

தொடர்ந்து போலீசார் அந்த வீட்டில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story