புதியவற்றை கற்கும் ஆர்வமே வெற்றியாளராக மாற்றும் - ஜெயஸ்ரீ சுரேஷ்


புதியவற்றை கற்கும் ஆர்வமே வெற்றியாளராக மாற்றும்  - ஜெயஸ்ரீ சுரேஷ்
x
தினத்தந்தி 10 Jan 2022 5:30 AM GMT (Updated: 9 Jan 2022 5:56 AM GMT)

இதுவரை நான் செய்யும் ஒவ்வொரு செயலிலும், எனக்கு பிடித்தமானதையும், என்னால் முடிந்ததையுமே செய்து வருகிறேன். அந்த வகையில், அடுத்த கட்டமாக தொடங்கியதுதான் தினை வகை உணவு விநியோகம்.

“புதிது புதிதாகக் கற்றுக் கொள்ளும் ஆர்வமும், என்னிடமுள்ள தனித்துவத்தின் மூலம் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும்தான் என்னை தொழில் முனைவோராக மாற்றியது” என்கிறார் ஜெயஸ்ரீ சுரேஷ்.

திருச்சி, தில்லை நகரில் ஆறு ஆண்டுகளாக மணப்பெண் அலங்கார நகைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார் ஜெயஸ்ரீ. தான் கற்றுக் கொண்டதை பிறருக்கும் கற்றுக் கொடுக்கிறார். பல கல்லூரி மாணவிகளுக்குத் தொழில் முனைவோருக்கான பயிற்சி அளித்து, அவர்களையும் தொழில் முனைவோராக மாற்றி இருக்கிறார்.

இனி ஜெயஸ்ரீ தொடர்கிறார்...

“பெண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்வதி லும், விருப்பமான நகைகளைத் தேர்வு செய்வதிலும், தனித்துவமாகக் காட்டிக் கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள். என்னுடைய எண்ணமும் அவ்வாறுதான் இருந்தது. எனக்காகவும், எனது இரண்டு பெண் குழந்தைகளுக்காகவும் பொழுதுபோக்காக நகைகள் தயாரிக்க ஆரம்பித்தேன். அதுவே இன்றைக்கு எனக்கான அடையாளத்தை தந்துள்ளது.

டெரகோட்டா, டாட் மண்டலா ஆர்ட், சில்க் த்ரெட் ஆர்ட், ஹேண்ட் பெயிண்டட் ஜூவல்லரி, கெம்ப் ஜூவல்லரி, ஆக்சிடைஸ்ட் ஜூவல்லரி, ஆன்டிக் ஜூவல்லரி, செமி பிரெஷீயஸ் ஜூவல்லரி, பாலிமர் கிளே ஜூவல்லரி என ஒன்பது வகையான அலங்கார நகைகளை வீட்டிலேயே தயாரித்து, இணையதளம் மூலம் விற்பனை செய்து வருமானம் ஈட்டி வருகிறேன்.

சிறுவயதில் இருந்தே எனக்கு புதிதாக ஒன்றை உருவாக்குவதில் அதிக ஆர்வம் இருந்தது. வண்ணங்களின் மீதான காதலால் ரங்கோலி வரைவதில் தொடங்கியது என்னுடைய பயணம். புதிது புதிதாகப் பல வண்ணங்களில், புதிய முறைகளில் வரையத் தொடங்கினேன். பல ரங்கோலிப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வாங்கினேன். பின்னர் சில போட்டிகளில் நடுவராகவும் இருந்திருக்கிறேன்.

அதன் அடுத்தகட்ட முயற்சிதான், ஒன்பது வகையான அலங்கார நகைகள்.  நாங்கள் வசிக்கும் பகுதியில் இதற்கான மூலப்பொருட்கள் கிடைக்காது என பலரும் எண்ணினர். நம்மிடம் இருப்பதை வைத்தே தயாரிக்க முடியும் என்பதை உறுதி செய்து விற்பனை செய்யத் தொடங்கினேன். நண்பர்கள் மூலமாக வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், இது போன்ற அலங்கார நகைகளை அதிகம் விரும்புகின்றனர்.  பரிசு அளிப்பதற்கும், தங்களின் பயன்பாட்டிற்காகவும் வாங்க ஆரம்பித்தனர்.

சமூக வலைத்தளங்களான வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றில் என்னுடைய தயாரிப்புகளைப் பதிவிட்டேன். இதன் மூலம் பல சமூக வலைத்தள நிறுவனங்களில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டனர். அவர்கள் வழியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர்.



மணப்பெண் அலங்காரங்களில் பெண்கள் தங்களுடைய புடவைக்கு ஏற்றவாறு நகைகளைத் தேர்வு செய்கின்றனர். எனவே அவர்கள் எங்களிடம் சொல்லும்  டிசைன்களை ஓரிரு நாட்களில், அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு தயார் செய்து கொடுக்கிறோம்.

இந்த ஆறு ஆண்டுகாலப் பயணத்தில் பலர் இதன்மூலம் பயன்பெற்றுள்ளனர். அவர்களும் என்னுடன் இணைந்து பயணித்து வருகின்றனர். இதுவரை நான் செய்யும் ஒவ்வொரு செயலிலும், எனக்கு பிடித்தமானதையும், என்னால் முடிந்ததையுமே செய்து வருகிறேன். அந்த வகையில், அடுத்த கட்டமாக தொடங்கியதுதான் தினை வகை உணவு விநியோகம்.

பாரம்பரிய அரிசி வகைகளையும், தினை வகைகளையும் பயன்படுத்தி, தோசை மாவு, ஆப்ப மாவு தயார் செய்து, விற்பனை செய்து வந்தேன். இதற்கு வரவேற்பு கிடைக்கத் தொடங்கியதையடுத்து, 35 வகை மாவுகளை விற்பனை செய்து வருகிறேன்.

பண்டிகைக் காலங்களில் தினையைப் பயன்படுத்தி 7 முதல் 15 வகை இனிப்புகளை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் ஆரோக்கியத்துக்கு ஏற்றவாறு தயாரித்து விற்பனை செய்கிறேன். இதற்கான வேலைகள் முழுவதையும் நானே செய்கிறேன்.

இவை அனைத்தின் மூலமும் எனக்கு போதுமான வருமானம் வந்தது. எனவே சமூகத்தின் மீது அக்கறை கொண்டு ஏதேனும் செய்ய வேண்டும் என்று எண்ணி, பள்ளி மாணவர்களுக்கு பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், வகுப்புகளையும், பல சமூக நல தொண்டு நிறுவனங்களோடு இணைந்து நடத்தி வருகிறோம்.

எனக்கான பாதையில் நான் தொடர்ந்து பயணிப்பதற்கும், என்னுடைய  வெற்றிக்கும் என்னு டைய அம்மா சுகந்தா, அப்பா மனோகர், கணவர் சுரேஷ்குமார் மற்றும் உறவினர்கள் அனைவருமே உறுதுணையாக இருந்தனர். அவர்களுடைய ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்கள் என் மீது கொண்ட நம்பிக்கையும், சிறந்த தொழில் முனைவோராக எனக்கு கிடைத்த விருதுகளும், என்னைத் தொடர்ந்து பயணிக்க வைக்கின்றன’’ என்கிறார் ஜெயஸ்ரீ.

தொடர்ந்து பல மாணவிகளுக்கும், பெண்களுக்கும் பயிற்சி அளித்து, பல தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்ற எதிர்கால திட்டத்தோடு செயல்பட்டு வருகிறார் ஜெயஸ்ரீ.

Next Story