பிளாஸ்டிக்கில் இருந்து பயனுள்ள உயிரி எரிபொருள் தயாரித்து சாதனை


பிளாஸ்டிக்கில் இருந்து பயனுள்ள உயிரி எரிபொருள் தயாரித்து சாதனை
x
தினத்தந்தி 14 March 2022 5:30 AM GMT (Updated: 12 March 2022 11:15 AM GMT)

பிளாஸ்டிக் கழிவுகளை குறைந்த வெப்பநிலையில் வைக்கும்போது, அது மீத்தேன், புரொப்பேன் மற்றும் ஈத்தேன் போன்ற வாயுப் பொருட்களாக உருமாறி, பிளாஸ்டிக் கழிவுகளை எளிதாக உடைத்து எத்தனாலாக (உயிரி எரிபொருள்) மாற்றப்படும். இது ஏற்கனவே உள்ள பிற கண்டுபிடிப்புகளை விட மிகவும் மலிவாக எரிபொருளை உற்பத்தி செய்வதாக கூறப்படுகிறது.

லகத்தையே அச்சுறுத்தும் விஷயமாக உருவெடுத்து வருகிறது பிளாஸ்டிக். சுற்றுச்சூழலுக்கும், பிற உயிரினங்களுக்கும் மட்டுமில்லாமல் மனிதர்களுக்கும் ஆபத்தாக மாறி வருகிறது. பல கண்டுபிடிப்பாளர்கள் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து, நன்மை தரும் புதிய பொருட்களை தயாரித்து வருகிறார்கள். அந்த வகையில் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து உயிரி எரிபொருளை மலிவாக உற்பத்தி செய்யும் வழியை கண்டுபிடித்து அசத்தி இருக்கிறார் எகிப்தைச் சேர்ந்த அஸ்ஸா அப்தெல் ஹமித் பயாத்.

அஸ்ஸா அப்தெல், பள்ளி மாணவியாக இருந்தபோது எரிபொருளான பெட்ரோலியம் மற்றும் எண்ணெய்யின் விலை அதிகரித்து வருவதை கவனித்தார். அதற்கு மாற்று வழி என்ன? என்று சிந்தித்தபோது ஆராய்ச்சியாளர்கள் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து உயிரி எரிபொருளை உற்பத்தி செய்வதற்கான வழியை கண்டுபிடிப்பதில் ஈடுபட்டுள்ளனர் என்பதை அறிந்தார். ஆனால், மறுசுழற்சி செய்யப்பட்ட உயிரி எரிபொருள் விலை உயர்ந்ததாக இருந்தது. எனவே அதற்கு மாற்றாகவும், விலை மலிவாகவும் பிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டார்.

அஸ்ஸா அப்தெல் இதற்காக, கெய்ரோவில் உள்ள எகிப்திய பெட்ரோலிய ஆராய்ச்சி நிறுவனத்தை அணுகினார். பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, அவர் கால்சியம் பெண்டோனைட் எனப்படும் பிளாஸ்டிக்கை உடைக்கப் பயன்படும் புதிய வினையூக்கியை (நிரந்தர ரசாயன மாற்றத்திற்கு உட்படாமல், ரசாயன எதிர்வினையின் வீதத்தை அதிகரிக்கும் ஒரு பொருள்) கண்டுபிடித்தார். 

பிளாஸ்டிக் கழிவுகளை குறைந்த வெப்பநிலையில் வைக்கும்போது, அது மீத்தேன், புரொப்பேன் மற்றும் ஈத்தேன் போன்ற வாயுப் பொருட்களாக உருமாறி, பிளாஸ்டிக் கழிவுகளை எளிதாக உடைத்து எத்தனாலாக (உயிரி எரிபொருள்) மாற்றப்படும். இது ஏற்கனவே உள்ள பிற கண்டுபிடிப்புகளை விட மிகவும் மலிவாக எரிபொருளை உற்பத்தி செய்வதாக கூறப்படுகிறது.

பல வளரும் நாடுகளில் பிளாஸ்டிக் கழிவுகளின் பிரச்சினை இருக்கிறது. குறிப்பாக எகிப்து மட்டும் ஆண்டுக்கு ஒரு மில்லியன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. அஸ்ஸா அப்தெல் கண்டுபிடித்த முறையானது அதிகரித்து வரும் எரிவாயு விலை மற்றும் பிளாஸ்டிக் கழிவுப் பிரச்சினைக்கு மலிவான மற்றும் நிலையான தீர்வாக அமையும் என்று பல ஆராய்ச்சியாளர்கள் பாராட்டியுள்ளனர்.

அஸ்ஸா அப்தெல் தனது கண்டுபிடிப்புக்காக 2012-ம் ஆண்டு இளம் விஞ்ஞானிகளுக்கான 23-வது ஐரோப்பிய ஒன்றியப் போட்டியில், 37 நாடுகளைச் சேர்ந்த 130 போட்டியாளர்களை வீழ்த்தி, ‘ஐரோப்பிய இணைவு மேம்பாட்டு ஒப்பந்த விருதை’ வென்றார்.

‘‘பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து மலிவான உயிரி எரிபொருள் உற்பத்தி செய்து, அனைத்து மக்களுக்கும் அது பயன்பட வேண்டும் என்பதே என் கனவு. அதை நனவாக்குவதற்கு தொடர்ந்து உழைப்பேன்’’ என்கிறார் அஸ்ஸா அப்தெல். 

Next Story