நுண்சிற்பக்கலையில் கலக்கும் தானலட்சுமி


நுண்சிற்பக்கலையில் கலக்கும் தானலட்சுமி
x
தினத்தந்தி 6 Dec 2021 5:30 AM GMT (Updated: 4 Dec 2021 11:22 AM GMT)

நுண்சிற்பக்கலையை பென்சில், சாக்பீஸ் மட்டுமில்லாமல் காய்கறி, சோப் இவற்றைக் கொண்டும் செய்திருக்கிறேன். தாய்ப்பால், தொப்புள்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தியும் பரிசுப்பொருட்கள் தயாரித்திருக்கிறேன்.

லையின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக, பள்ளிப் பருவத்திலேயே ஓவியம் வரைவதிலும், சுண்ணாம்புத்துண்டு, எழுதுகோல் போன்ற பொருட் களைக் கொண்டு நுண்சிற்பங்கள் செய்வதிலும் ஈடுபட்டிருக்கிறார் தானலட்சுமி. 22 வயதாகும் இவர், நுண்கலையில் முதுகலை படித்து வருகிறார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் கந்தாடு கிராமத்தில் வசிக்கும் தானலட்சுமி நம்மிடம் பகிர்ந்து கொண்டவை...

எனக்கு சிறுவயதில் இருந்தே ஓவியம், சிற்பம் போன்றவற்றின் மீது  ஆர்வம் அதிகம். கோவிலுக்குச் சென்றால் கூட அங்கிருக்கும் கடவுள் சிற்பங்களின் கலை நுணுக்கத்தை ரசித்துப் பார்ப்பேன்.பெரும்பாலானவர்கள் சிற்பங்களைச் செய்கிறார்கள். நாம் அதில் இருந்து வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தேன். அதற்காக சாக்பீஸ் துண்டுகளைத்தான் முதலில் தேர்ந்தெடுத்தேன்.

சமூக வலைத்தளங்களில் பார்த்தபோது, சாக்பீஸ் துண்டுகளை நிறைய பேர் பயன்படுத்தியுள்ளார்கள் என தெரிந்தது. வேறு ஏதாவது கடினமானப் பொருட்களைக் கொண்டு சிற்பங்களைச் செய்ய வேண்டும் என்றுதான் பென்சிலைத் தேர்ந்தெடுத்தேன். அதில் சிற்பங்களைச் செதுக்குவது சற்றே சிரமமாக இருக்கும். இறுதியில் பென்சிலுக்கு உயிர் கொடுத்தது போல மகிழ்ச்சி இருக்கும்.

ஓவியம் வரைவதிலும் எனக்கு ஈடுபாடு உண்டு. தஞ்சாவூர், கலம்காரி, மதுபானி, வார்லி, ஆயில், அக்ரலிக், போஸ்டர் இந்த மாதிரியான வகைகளில் ஓவியங்கள் வரைகிறேன். எனது ஓவியம் ஒவ்வொன்றும் மக்களின் வாழ்வியலைக் குறிக்கும். வார்லி ஓவியம் முக்கோண வடிவத்தில் மனிதர்களைப் பிரதிபலிக்கும். அதுபோல் தஞ்சாவூர் ஓவியங்களும் கோவிலில் உள்ள சிற்பங்களை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும்.



மேலும் எழுத்துக்கலை, கேலிச்சித்திரம், நகங்கள் மற்றும் முகங்களில் ஓவியம் வரைகிறேன். மினியேச்சர் செய்வதில் மிகவும் விருப்பமுண்டு. மீன்களின் செதில்களில் இயற்கையை மையப்படுத்தி ஓவியம் செய்திருக்கிறேன். களிமண் சிற்பங்கள் செய்கிறேன். நுண்சிற்பக்கலையை பென்சில், சாக்பீஸ் மட்டுமில்லாமல் காய்கறி, சோப் இவற்றைக் கொண்டும் செய்திருக்கிறேன். தாய்ப்பால், தொப்புள்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தியும் பரிசுப்பொருட்கள் தயாரித்திருக்கிறேன்.

பசையை வைத்து, தலைகீழாக உருவத்தை வரைந்து, அதை நேராக்கி அந்த ஓவியத்தில் கோலமாவு கொண்டு நிறைவு செய்திருக்கிறேன். இவை அனைத்தையும் என் சுய முயற்சியிலேயே கற்றுக் கொண்டேன். பள்ளி மற்றும் கல்லூரியில் நடைபெற்ற ஓவியப்போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகள் பெற்றிருக்கிறேன்.

எனக்குப் பிடித்ததை செய்வதற்கு முழு ஆதரவாக இருப்பது எனது அப்பாதான். உடனிருக்கும் நண்பர்கள் ஊக்கப்படுத்துவார்கள்.

2019-ம் ஆண்டு அக்டோபரில் 0.7 மில்லி மீட்டர் பென்சில் ஈயத்தில் தேசிய கீதத்தை 3 மணி நேரத்திற்குள் செதுக்கி உலக சாதனையை படைத்தேன். இது ‘கலாம் வேர்ல்டு ரெகார்ட்ஸ்’ புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு ‘தி டயோசீஸ் ஆப் ஏஷியா’ என்ற அமைப்பில் ‘ஆர்ட் அண்ட் கல்ச்சர்’ என்ற பிரிவில் கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்தனர்.
2021-ம் ஆண்டு மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ‘நேச்சர் அண்ட் சொசைட்டி’ என்ற தலைப்பில் ‘நியூரல் வால் பெயிண்டிங்’ போட்டியில் இரண்டாவது பரிசும், ஊக்கத்தொகையும் பெற்றேன். இந்தக் கலையை மற்றவர்களுக்குச் சொல்லித்தர வேண்டும் என்பதே என் எதிர்கால திட்டம்” என்றார் தானலட்சுமி. 

Next Story