களிமண்ணில் கடல்தாண்டிய தமிழ் கலாசாரம்


களிமண்ணில் கடல்தாண்டிய தமிழ் கலாசாரம்
x
தினத்தந்தி 18 April 2022 6:02 AM GMT (Updated: 18 April 2022 6:02 AM GMT)

முதலில் எந்த வடிவம் வேண்டுமோ அதைக் களிமண்ணில் செய்து, 2 முதல் 3 நாட்கள் வரை வெயிலில் உலர வைப்பேன். பின் அதன் மேல் பென்சிலால், எனக்கு தேவையான டிசைனை வரைந்து கொள்வேன். பிறகு அதை முதற்கட்டமாகச் செங்கல் போல நெருப்பில் சுட்டு எடுப்பதற்குக் கொடுத்து விடுவேன்.

ஸ்திரேலியா வாழ் தமிழ்ப் பெண்ணான வைஷாலி, ‘அவள்’ என்ற பெயரில், மண்பாண்டங்கள் மூலம், தமிழ் மங்கையரின் அழகை உலகறியச் செய்து வருகிறார். திருச்சியில் பிறந்து வளர்ந்த இவர், தனது தந்தையின் பணியின் காரணமாக 16 வயதில் குடும்பத்தினரோடு ஆஸ்திரேலியாவில் குடியேறினார். 

ஐ.டி ஊழியரான வைஷாலி ஓய்வு நேரங்களில், தாங்கள் வசித்த பகுதிக்கு அருகே உள்ள மண்பாண்டங்கள் செய்யும் வகுப்பில் சேர்ந்தார். ஆர்வத்தோடு கற்றுக்கொண்டு, தனது கற்பனைகளை புகுத்தி பலவிதமான பொருட்களை செய்தார். தற்போது அதன் மூலம் வெற்றிகரமான தொழில் முனைவோராக பளிச்சிடுகிறார்.

அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை இதோ: 

“ஆரம்பத்தில் பொழுதுபோக்குக்காகவும், வீட்டை அலங்கரிப்பதற்காகவும் குடுவைகள், தட்டுகள், பூந்தொட்டிகள், சுவர் அலங்காரங்கள் எனப் பலவித மண்பாண்ட பொருட்களை செய்தேன். அதைப் பார்த்த என் கணவர், ‘இதை ஒரு தொழிலாகவே செய்யலாமே’ என ஊக்குவித்தார். அவ்வாறுதான் எனது நிறுவனத்தைத் தொடங்கினேன். 

தற்பொழுது நான் ஆஸ்திரேலியாவில் இருந்தாலும், எனக்கு தமிழ்நாட்டுக் கலாசாரமான, சேலை, ஜடைமுடிப் பின்னல்கள், மல்லிகைப் பூ மீது ஆர்வம் அதிகம். அவ்வாறு தமிழ்ப் பெண்ணின் பின்புறத் தோற்றத்தை வடிவமைத்தபொழுது, அது இன்னும் ரசனை மிக்கதாகத் தெரிந்தது. எனவே அதையே எனக்கான அடையாள முத்திரையாக ஆக்கிக் கொண்டேன். 

முதலில் எந்த வடிவம் வேண்டுமோ அதைக் களிமண்ணில் செய்து, 2 முதல் 3 நாட்கள் வரை வெயிலில் உலர வைப்பேன். பின் அதன் மேல் பென்சிலால், எனக்கு தேவையான  டிசைனை வரைந்து கொள்வேன். பிறகு அதை முதற்கட்டமாகச் செங்கல் போல நெருப்பில் சுட்டு எடுப்பதற்குக் கொடுத்து விடுவேன். 

அது தயாராவதற்கு, ஒரு வாரம் ஆகும். அடுத்ததாக, அந்தப் பொருளுக்கு பளபளப்பாகவோ, மேட் பினிஷிங் முறையிலோ மேல் பூச்சு பூசுவேன். பின் இரண்டாம் கட்டமாக தீயில் சுடுவதற்குக் கொடுத்து விடுவேன். அதன் பிறகே அந்தப் பொருள் இறுதி வடிவம் பெறும். இவ்வாறு ஒரு பொருள் முழுமை பெறுவதற்கு மூன்று வாரம் ஆகும். 

நான் பயன்படுத்தும் களிமண் மற்றும் வண்ணம் இரண்டுமே உடலுக்கு தீங்கு விளைவிக்காது. 

Next Story