மகப்பேறு ஒரு கொண்டாட்டம் - டீனா அபிஷேக்!


மகப்பேறு ஒரு கொண்டாட்டம் - டீனா அபிஷேக்!
x
தினத்தந்தி 10 Jan 2022 5:30 AM GMT (Updated: 9 Jan 2022 6:46 AM GMT)

ஒவ்வொரு நாளுக்கும் தேவையான ஊட்டச்சத்தைக் கொடுக்க தாய்ப்பாலால் மட்டுமே முடியும். தாய்ப்பாலால் கொரோனா தொற்றுகூட குழந்தைக்குப் பரவவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். அதனால் தாய்ப்பாலின் அற்புதங்கள் மெய்சிலிர்க்க வைப்பவை.

சென்னையில் வசிக்கும் டீனா அபிஷேக், மனநல ஆலோசகராகவும், மகப்பேறு மற்றும் பாலூட்டுதல் ஆலோசகராகவும் உள்ளார்.
பல சர்வதேச சான்றிதழ்களைப் பெற்றுள்ள இவர், தனது பணியின் மூலம் பெண்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் மேம்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். லண்டனில் உள்ள உலக மனிதாபிமான இயக்கத்தின் “ஸ்டார் ஆஃப் கோவிட்” விருதைப் பெற்றுள்ள டீனா அபிஷேக்கின் பேட்டி…

உங்களைப் பற்றி?
நான் பிறந்தது, படித்தது எல்லாமே நாகர்கோவிலில்தான். எனக்கு பத்து வயதானபோது எதிர்பாராத குடும்ப சூழலால், எனது தாய் மேரி ரோஸ்லின், தனி ஆளாக என்னையும், எனது தங்கையையும் வளர்த்தார். எனது கணவர் அபிஷேக் ஐ.டி. நிறுவனத்தில் மேலாளர். மகன் ஜோஹான் எல்.கே.ஜி. படிக்கிறார்.

தாய் சேய் நலனுக்காக எந்தெந்த வகைகளில் பணி செய்கிறீர்கள்?
எனது நிறுவனத்தின் மூலம், கருத்தரிப்புக்கு முன்பாகவே தம்பதிகளை மகிழ்ச்சியான மனநிலைக்குக் கொண்டுவந்து,  அவர்கள் ஆரோக்கியமான குழந்தையை உருவாக்குவதற்கு உதவி செய்கிறேன். குழந்தை, ஒரு ‘செல்’லாக உருவாகும்போதே அதனால் கருவறையை உணர முடியும் என்பதால், கர்ப்பகாலத்தில் தம்பதிகளை மகிழ்ச்சியோடிருக்க தயார்படுத்துகிறேன். வாந்தி, தலைசுற்றல் போன்ற சூழல்களால் மகப்பேறு என்பதை ஒரு வியாதிபோல கருதாமல், அது குழந்தையின் வளர்ச்சியால் ஏற்படும் மாற்றம் என்பதைப் புரிய வைத்து கர்ப்ப காலத்தை மகிழ்ச்சியோடு கொண்டாட வைக்கிறேன். 

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்குத் தானாக பால் குடிக்கத் தெரியாது என்று பவுடர் பால் தருவார்கள். மேலும், தாய்ப்பால் சுரக்கவில்லை என்றோ, இரட்டைக் குழந்தைகளாக இருந்தால் தாய்ப்பால் போதவில்லை என்றோ பவுடர் பாலைக் கொடுப்பார்கள். இதுபோன்ற சூழலில் உள்ள தாய்மார்களுக்கு ‘நிச்சயம் உங்கள் பாலையே குழந்தைகளுக்குக் கொடுக்க முடியும்’ என்ற நம்பிக்கையைக் கொடுத்து அதை சாத்தியமாக்குவதற்கான ஆலோசனைகளையும், குழந்தைகளுக்குச் சத்துள்ள உணவுகளை அளிப்பது பற்றிய ஆலோசனைகளையும் வழங்குகிறேன். குழந்தைகள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் நிலையைத் துவக்க, பள்ளி, கல்லூரிகளில் ‘பாலியல் கல்வி’ வகுப்புகளையும் எடுத்து வருகிறேன்.



குழந்தைகளுக்குத் தாய்ப்பாலின் அவசியம் பற்றி சொல்லுங்கள்?
இளம் தாய்மார்கள் பால் கொடுப்பதில் நிறைய சிரமங்களைச் சந்திப்பதால், பவுடர் பால் கொடுக்கத் தொடங்கிவிடுகின்றனர். பச்சிளம் குழந்தைகளுக்கு பவுடர் பாலைக் கொடுப்பது நல்லதல்ல; தாய்ப்பால் மட்டுமே அவர்களுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். ஒவ்வொரு நாளுக்கும் தேவையான ஊட்டச்சத்தைக் கொடுக்க தாய்ப்பாலால் மட்டுமே முடியும். தாய்ப்பாலால் கொரோனா தொற்றுகூட குழந்தைக்குப்  பரவவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். அதனால் தாய்ப்பாலின் அற்புதங்கள் மெய்சிலிர்க்க வைப்பவை.

குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பதால் பாதிப்பு ஏற்படுமா?
பசும்பால் கொடுக்கும் வழக்கம் காலங்காலமாக இருக்கிறது. கன்றுகள் முட்டிமோதுவதால் இயற்கையாக பசுவின் மடியில் சுரக்கும் பால்தான் ஆரோக்கியமானது. இந்தக் காலத்தில் அதிக பாலைப் பெறுவதற்காக பசுக்களுக்கு சிலர் ஹார்மோன்களை ஊசியின் மூலம் செயற்கையாக செலுத்துகின்றனர். இந்த முறையில் கிடைக்கும் பாலை குழந்தைகளுக்குக் கொடுப்பதை தவிர்க்கலாம். இயற்கையாகப் புல்லைத் தின்று வளரும் மாடுகளாக இருந்தால், அந்தப் பாலை பயன்படுத்தலாம்.

‘ஸ்டார் ஆஃப் கோவிட்’ விருது கொடுக்கப்பட்டது குறித்து சொல்லுங்கள்?
முதன்முதலில் கொரோனா வந்தபோது, ‘அதன் அறிகுறிகள் என்ன? அது என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தப்போகிறது?’ என்று எல்லோருக்குமே குழப்பம் இருந்தது. நிறைய பேர், குறிப்பாக கர்ப்பிணிகள் பயத்துடன் என்னிடம் ஆலோசனை கேட்டார்கள். எனவே உலக சுகாதார அமைப்பின் மூலமாக ஒரு சான்றிதழ் படிப்பை முடித்து, அந்த தகவல்களைப் பலரிடமும் கொண்டுசேர்ப்பதற்கு உதவினேன். 

அப்போது, பெரும்பாலான மருத்துவர்கள் கர்ப்பிணிகளுக்குக்கூட ஆலோசனையளிக்க முன்வராத நிலை இருந்தது. அந்தச்சூழலில் சரியான வழிகாட்டுதலை அவர்களுக்குக் கொடுத்தேன். ஊரடங்கு காலத்தில் உணவோ, ஊட்டச்சத்தோ இல்லாமல் மலைவாழ் மக்களின் பிஞ்சுக் குழந்தைகள் அதிகம் இறப்பதை அறிந்தேன். அவர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்தேன். அதன் காரணமாக லண்டனில் உள்ள உலக மனிதாபிமான இயக்கத்திலிருந்து எனக்கு ‘ஸ்டார் ஆஃப்  கோவிட்’ என்ற விருதைக் கொடுத்தனர்.

உங்களின் லட்சியம் அல்லது எதிர்காலத் திட்டம் என்ன?
கர்ப்பகாலத்தை, நோயாளி போன்ற மனநிலையில் அணுகும் சமூகத்தில் நாம் இருக்கிறோம். அதனால், ‘மகப்பேறு ஒரு கொண்டாட்டம்’ என்பதை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். ஏதோ காரணத்தால் தாய்ப்பால் தருவதை நிறுத்தியவர்களும், பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பால் கொடுக்கலாம் என்ற விழிப்புணர்வை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும். 

சிறு வயதில் இருந்தே பயத்துடனும், பாதுகாப்பற்ற மனநிலையிலும் அதிக தாழ்வு மனப்பான்மையோடும் வளர்ந்தவள் நான். அந்த மனத்தடைகளை எல்லாம் உடைத்து வெளியே வந்து சாதித்த எனது வாழ்க்கை அனுபவங்களைப் புத்தகமாக்கி, மற்ற பெண்களுக்கு நம்பிக்கையையும், உந்துதலையும் ஏற்படுத்த வேண்டும்.

Next Story