வீட்டில் இருந்தே வேலை செய்வதில் நேர நிர்வாகம்


வீட்டில் இருந்தே வேலை செய்வதில் நேர நிர்வாகம்
x
தினத்தந்தி 13 Oct 2021 7:52 AM GMT (Updated: 13 Oct 2021 7:52 AM GMT)

காலையில் எழுந்திருக்கும் நேரத்தை முதலில் நிர்ணயித்து, அதற்கேற்ப வேலைகளை அட்டவணை போடுங்கள். அடுத்த நாள் சமையலுக்கான காய்கறிகள், மசாலாப் பொருட்கள் என அனைத்தையும் முதல் நாளே எடுத்து வைத்து விடுங்கள்.

வீட்டு வேலைகள், அலுவலகப் பணிகள், குழந்தை வளர்ப்பு என சுழன்றுக்கொண்டே இருக்கும் பெரும்பாலான பெண்கள், நேரம் இல்லை எனும் காரணத்தால் தங்களை கவனித்துக் கொள்வது இல்லை. நேரத்தைச் சரியாகத் திட்டமிட்டு செயல்பட்டால் எதையும் எளிதாகக் கையாளலாம். இதோ அதற்கான சில வழிகள்.

அவசியத்திற்கு முன்னுரிமை:

நாள் தொடங்கும்போதே, அன்று எந்தெந்த வேலைக்கு முதலிடம், எதற்கு  இரண்டாம் இடம் தருவது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும், எதை, எப்போது, எப்படி செய்ய வேண்டும் என்பதை முதலில் திட்டமிட வேண்டும். இதில் எந்தத் தடங்கல் வந்தாலும், திட்டமிட்டபடி முடிக்க வேண்டும். இதனைப் பின்பற்றினால் வேலைகளைத் திறம்பட செய்து முடிக்கலாம்.

அமைதியான இடம்:

வீட்டில் இருந்து வேலை செய்யும்போது, பல குறுக்கீடுகள் வந்துகொண்டுதான் இருக்கும். இதனால், அலுவலக வேலையில் முழுமையாக ஈடுபட முடியாமல் போகும். இதைத் தவிர்ப்பதற்காக அலுவலக வேலை செய்வதற்கு என தனியாக இடத்தை ஒதுக்குங்கள். இங்கு, வேறு எந்த இடையூறும் இல்லாமல், அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். மன அழுத்தம் ஏற்பட்டு வேலையில் கவனம் சிதறும்போது, தியானம் அல்லது இலகுவான சில பயிற்சிகள் செய்து வேலையில் முழுமையாக ஈடுபடுங்கள்.

வேலைகளை எளிமையாக்குங்கள்:

வார நாட்களில், வீட்டு வேலைகளை மிகவும் எளிதாக முடியும் வகையில் திட்டமிடுங்கள். விரைவாக முடியும் வகையிலான சமையல்,  குறைவான பாத்திரங்களைப் பயன்படுத்துதல், முதல் நாள் துணிகளை மறுநாள் காலையில் துவைப்பது என, அனைத்தையும் எளிமையான வகையில் பிரித்து திட்டமிடுங்கள். ஷாப்பிங் செல்வதை வார இறுதி நாட்களில் வைத்துக் கொள்ளுங்கள்.

குடும்பத்தினரை ஈடுபடுத்துங்கள்:

வீட்டு வேலைகளை நீங்கள் ஒருவரே பார்க்க வேண்டும் என நினைக்காமல், சிறிய வேலைகளில் குடும்பத்தினரையும் ஈடுபடுத்துங்கள். இதன் மூலம் பணிச்சுமை குறையும். நேரத்தையும் சரியாக கையாள முடியும். பணிகளைப் பிரித்து சுழற்சி முறையில் செய்யும்போது, குடும்ப உறுப்பினர்களுக்கு சலிப்பு ஏற்படாது.

நேர அட்டவணை:

காலையில் எழுந்திருக்கும் நேரத்தை முதலில் நிர்ணயித்து, அதற்கேற்ப வேலைகளை அட்டவணை போடுங்கள். அடுத்த நாள் சமையலுக்கான காய்கறிகள், மசாலாப் பொருட்கள் என அனைத்தையும் முதல் நாளே எடுத்து வைத்து விடுங்கள். 

இதனால் மறுநாள் சமையலை எளிதாகவும், விரைவாகவும் முடிக்க முடியும். காலை உணவுக்கு செய்யும் சாம்பாரையே, மதியத்திற்கான சாம்பார் சாதமாக மாற்றிவிடுங்கள். இதனால், வேலை மிக எளிதில் முடியும். இரவு உணவை உங்களுக்கு கிடைக்கும் இடைவெளியில் சிறிது, சிறிதாகச் செய்தால், அந்த வேலையையும் சுலபமாக செய்து விடலாம்.

உங்களுக்கான நேரத்தை ஒதுக்குங்கள்:

நாள் முழுவதும் வேலை, குடும்பம் என சுழன்று கொண்டிருக்காமல், உங்களுக்காகவும் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். அந்த நேரம் மனதை இலகுவாக்கும். ஆரோக்கியமான, சத்துள்ள உணவைச் சாப்பிடுங்கள். பெண்கள்தான் குடும்பத்தின் அஸ்திவாரம். எனவே, உங்கள் பலத்தை இழக்காமல் இருக்க நீங்கள் தான் அதில் கவனம் செலுத்த வேண்டும்.

Next Story