பெண்களை பாதிக்கும் அதீத சிந்தனை!


பெண்களை பாதிக்கும் அதீத சிந்தனை!
x
தினத்தந்தி 25 Oct 2021 4:30 AM GMT (Updated: 23 Oct 2021 11:54 AM GMT)

கவலை மற்றும் மனச்சோர்வு, ஆண்களை விடப் பெண்களை இரண்டு மடங்கு அதிகமாக பாதிக்கிறது. மாதவிடாய் சுழற்சி மற்றும் கர்ப்பக்காலங்களில் பெண்களின் ஹார்மோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கின்றன.

பெண்கள் ஒரே நேரத்தில் பலவற்றைப் பற்றி சிந்திக்கும் குணம் கொண்டவர்கள். ஒரு கட்டத்தில் இந்த சிந்தனையே அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தும். இதன் காரணமாக, பெண்கள் பல சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். இது குறித்து உளவியல் ரீதியாக தெரிந்துகொள்ளலாம்.

கவலை என்பது மன அழுத்தத்தின் முதல் படி. அதைக் கட்டுப்படுத்துவது அனைவருக்கும் கடினமான விஷயமாக உள்ளது. இது அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும்போது, எதிர்மறையான பல சிக்கல்களை உருவாக்குகிறது. அடிக்கடி கவலைப்படும் பிரச்சினை ஐந்தில் ஒருவருக்கு உள்ளது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

கவலை மற்றும் மனச்சோர்வு, ஆண்களை விடப் பெண்களை இரண்டு மடங்கு அதிகமாக பாதிக்கிறது. மாதவிடாய் சுழற்சி மற்றும் கர்ப்பக்காலங்களில் பெண்களின் ஹார்மோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கின்றன. கர்ப்பக் காலத்தில் ஏற்படும் எடை அதிகரிப்பு, உடல் பருமன் போன்றவை பெண்களிடையே கவலையையும், மனச்சோர்வையும் அதிகரிக்கின்றன.

இதைத் தவிர அதீத சிந்தனை என்பது சில குடும்பங்களில் மரபியல் வழியாகவும் ஏற்படக்கூடியது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிர்ச்சிகரமான நிகழ்வுகள், தாக்குதல் அல்லது பாலியல் வன்கொடுமையை அனுபவிப்பது போன்ற செயல்களால் இது பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது.

கவலையைத் தொடர்ந்து மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவை கடுமையான உடல் மற்றும் மனநலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் தகுந்த சிகிச்சைகளின் மூலம் எளிதில் குணப்படுத்த முடியும். உங்களுக்கு மனச்சோர்வு மற்றும் தேவையில்லாத கவலை இருந்தால், அதை ஆரம்பத்திலேயே சரி செய்வதற்கான வழிகளை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.

மனநல பிரச்சினைக்கு ஆலோசனை கேட்கும்போது மனச் சோர்வுக்கான அறிகுறிகள் மற்றும் பிற உடல் நலப் பிரச்சினைகளைத் தெளிவாக கூறுவது மிகவும் அவசியம். மருத்துவரின் ஆலோசனையுடன் யோகா மற்றும் தியானம் போன்றவற்றிலும் ஈடுபடுவது நல்லது. இது கவலை, அதிக சிந்தனை மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவும்.


Next Story