நேர்காணலை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி?


நேர்காணலை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி?
x
தினத்தந்தி 27 Dec 2021 5:30 AM GMT (Updated: 25 Dec 2021 6:22 AM GMT)

நேர்காணல் குறித்த அச்சமும், கவலையும் திறமையை வெளிப்படுத்த தடையாக அமைந்து விடும். எனவே பயமின்றி இயல்பாக நடப்பது, நாம் தெளிவானவர் என்பதைப் புரியவைக்கும்.

ங்கள் படிப்புக்கு ஏற்ற வேலைக்காக முயற்சிக்கும் பெண்கள் பலருக்கும் ‘நேர்காணல்’ என்றாலே ஒருவித பதற்றம் ஏற்படுவது இயல்பு.

நேர்காணலுக்கான தயாரிப்புகளாக தகுந்த  உடை அணிவது, நேர்காணலுக்கு செல்லும் நிறுவனம் மற்றும் வேலையைப் பற்றிய விவரங்களை அறிந்திருத்தல் போன்றவை அடிப்படையானவை மட்டுமே.  இவற்றைத் தாண்டி நேர்காணலை எதிர்கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்வது எப்படி? என்பது பற்றிய சில வழிமுறைகள்:

தாக்கம்:
முதல் சந்திப்பிலேயே, நம்மைப் பற்றிய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவது நல்லது. நேர்காணலின்போது நம்முடைய தனித்தன்மை மற்றும் ஆளுமைத்திறனை மதிப்பிடுவார்கள். ‘ஆளுமை’ என்பது தனிப்பட்ட நடத்தை, அணுகுமுறை, பிறரிடம் பேசும் விதம் போன்றவற்றைச் சார்ந்தது. எனவே ஆளுமையை மேம்படுத்தும்போது  நேர்காணல் செய்பவருக்கு நம் மீதான  நம்பிக்கை அதிகரிக்கும்.

நேர்காணல் என்றாலே பொதுவான சில கேள்விகள் இருக்கும். நம்மைப் பற்றிய அறிமுகம், வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணம், இதற்கு முன்னால்  பணி செய்த  நிறுவனத்தில் இருந்து விலகியதற்கான காரணம் போன்ற கேள்விகளுக்கு எவ்வித தயக்கமுமின்றி பதிலளிக்கும்போது நம்முடைய தன்னம்பிக்கையை அறிந்து கொள்வார்கள்.

ஆர்வம்:
பல நிறுவனங்கள் பணியாளர்களிடம் புதியவற்றை தெரிந்துகொள்வது மீதான ஆர்வம், குழுவோடு இணைந்து செயல்படும் முனைப்பு, நம்பகத்தன்மை போன்றவற்றை எதிர்பார்க்கின்றன. அவற்றுக்கு ஏற்றது போல நமது தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நேரம் தவறாமை:
நேர்காணலுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகச் செல்லும் வழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். கால தாமதம் ஏற்படும்போது, தேவையற்ற பதற்றம் உண் டாகும். இது நேர்காணலின்போதும் எதி ரொலிக்கும்.

உண்மை, நேர்மை:
சுயவிவரப் பட்டியலில் நாம் அளித்துள்ள விவரங்களின் அடிப்படையிலேயே கேள்விகளும் அமையும். எனவே நேர்மையாகவும், தைரியத்தோடும் சரியான தகவல்களை அளிக்க வேண்டும்.

நம்முடைய திறமைகள், கல்வி அறிவு ஆகியவை நமது பேச்சிலும் எதிரொலிக்க வேண்டும். இது நம்மைத் தேர்வு செய்வதற்கு உதவும்.

தேர்வாளர்கள் கேட்கும் கேள்விகளைத்  தெளிவாகப் புரிந்துகொண்டு, சிறந்த பதிலை அளிக்க வேண்டு்ம். தடுமாற்றத்தோடு பதில் அளிக்கும் பொழுது நமது திறமைகளை வெளிப்படுத்த இயலாமல் போகும்.

நேர்காணல் குறித்த அச்சமும், கவலையும் திறமையை  வெளிப்படுத்த தடையாக அமைந்து விடும். எனவே பயமின்றி இயல்பாக நடப்பது, நாம் தெளிவானவர் என்பதைப் புரியவைக்கும்.

குழு நேர்காணல்:
இத்தகைய நேர்காணலில், கேள்விக்கு பதில் அளிக்கும்போதும், விவாதத்தில் கலந்துகொள்ளும் போதும், முதலில் பேசுவது முக்கியமானது. சரியான பதில்களை, சரியான விதத்தில் முன் வைப்பதும்அவசியமானது.

ஊதியம் பற்றிய கேள்விகளுக்கு, நாம் வேலை தேடும்  துறையில் உள்ள ஊதிய விகிதங்களுக்கு ஏற்றபடி பதில் தருவது நல்லது.

முறையான தயாரிப்பு, அச்சமற்ற தன்னம்பிக்கை, ஊக்கமான செயல்பாடு இவையே நேர்காணலில் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழிகள் ஆகும். 

Next Story