அயோடின் கலக்காத 210 கிலோ உப்பு பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை


அயோடின் கலக்காத 210 கிலோ உப்பு பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 13 Jun 2017 10:15 PM GMT (Updated: 13 Jun 2017 8:30 PM GMT)

திருவாரூர் பகுதியில் அயோடின் கலக்காத 210 கிலோ உப்பு பாக்கெட்டுகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருவாரூர்,

திருவாரூரில் அயோடின் கலக்காத உப்புகள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தது. இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவின்படி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் செல்வராஜ் தலைமையில் அலுவலர்கள் பாலுசாமி, விஜயகுமார், லோகநாதன், அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர் திருவாரூரை சுற்றியுள்ள திருக்காரவாசல், கோமல், மாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடைகளை ஆய்வு செய்தனர். அப்போது அயோடின் கலக்காத உப்பு பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

210 கிலோ உப்பு பறிமுதல்

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செல்வராஜ் கூறுகையில்,

திருவாரூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்த உரிய ஆய்வு நடத்தி பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அயோடின் கலக்காத உப்புகளை பயன்படுத்துவதால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படும். எனவே அந்த உப்புகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அயோடின் கலக்காத 210 கிலோ உப்பு பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரசின் விதிமுறை மீறி அயோடின் கலக்காத உப்பு பாக்கெட்டுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story