என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி சாவு, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி சாவு, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2017 10:15 PM GMT (Updated: 16 Jun 2017 8:31 PM GMT)

பராமரிப்பு பணியில் இருந்த போது என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி சுருண்டு விழுந்து சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

நெய்வேலி,

என்.எல்.சி. அனல் மின்நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளி சுருண்டு விழுந்து இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சுருண்டு விழுந்து சாவு

நெய்வேலி 30–வது வட்டத்தை சேர்ந்தவர் சங்கர்(வயது 34). இவருடைய மனைவி அமிர்தம். இவர்களுடைய மகன் மனோ, மகள் லத்திகா. அதே பகுதியில் உள்ள பள்ளியில் மனோ 10–ம் வகுப்பும், லத்திகா 8–ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

என்.எல்.சி. 2–வது அனல் மின்நிலையத்தில் தனியார் நிறுவனத்தில் சங்கர் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் அனல்மின்நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற்றது. இந்த பணியில் இருந்த சங்கர் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக என்.எல்.சி. அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

உடலை வாங்க மறுப்பு

இது பற்றி தகவல் அறிந்ததும் சங்கரின் மனைவி, மகன், மகள் மற்றும் உறவினர்கள் என்.எல்.சி. மருத்துவமனைக்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதற்கிடையே இறந்த சங்கரின் குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி.யில் வேலை வழங்க வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் என்று தொ.மு.ச. நிர்வாகிகள் மனிதவளத்துறை அதிகாரியிடம் கேட்டுக்கொண்டனர். அப்போது அவர், இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறினார்.

ஆனால், சங்கரின் உறவினர்கள், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கும் வரையில் சங்கரின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி மருத்துவமனை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக தெர்மல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story