இந்தியாவில் தனியார் விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைப்பதே எங்கள் குறிக்கோள்


இந்தியாவில் தனியார் விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைப்பதே எங்கள் குறிக்கோள்
x
தினத்தந்தி 25 Jun 2017 11:00 PM GMT (Updated: 25 Jun 2017 9:06 PM GMT)

இந்தியாவில் தனியார் விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைப்பதுதான் எங்கள் குறிக்கோள் என்று பள்ளப்பட்டி மாணவர் ரிபாத் சாருக் கூறினார்.

அரவக்குறிச்சி,

பிளஸ்-2 முடித்து விட்டு, விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும், கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த மாணவர் ரிபாத் சாருக் தலைமையிலான 6 மாணவர்கள் கொண்ட குழு உருவாக்கிய 64 கிராம் எடை கொண்ட மிகச்சிறிய செயற்கைகோள் சமீபத்தில், அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிலையமான “நாசா” நடத்திய போட்டியில் கலந்துகொண்டு, உலகத்தின் 57 நாடுகளில் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட 80 ஆயிரம் மாதிரிகளில் முதல் பரிசை பெற்றது.

இந்த செயற்கைகோள் கடந்த 22-ந் தேதி விண்ணில் “கலாம் சாட்” என்ற பெயரில் “நாசா” ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. முப்பரிமாண அச்சுத்தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைகோள் வானிலை, வான்வெளியில் உள்ள கதிர்வீச்சு, வெப்பம் ஆகியவற்றை ஆராயும் திறன் கொண்டது.

பரிசு

இந்த சாதனையை படைத்து தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்த மாணவர்கள் ரிபாத் சாருக், யக்னா சாய், வினய் பரத்வாஜ், தனிஷ்க் திவேதி, கோபிநாத் மற்றும் முகம்மது அப்துல் காசிப் ஆகியோர் கொண்ட மாணவர் குழு, மேலும் இதுபோன்ற பல சாதனைகளை செய்ய ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசின் சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.10 லட்சம் பரிசு அறிவித்தார்.

பேட்டி

இதையடுத்து மாணவர் ரிபாத் சாருக் நேற்று பள்ளப்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாணவர்கள் என்றும் சோர்ந்துவிடக்கூடாது. தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் அறிவியல் கண்காட்சி நடத்தி வருகிறது. இதனை மாணவ-மாணவிகள் பயன்படுத்திக்கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளை ஊக்கப்படுத்த வேண்டும். கடந்த 4 ஆண்டுகால உழைப்பின் காரணமாக எங்களுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. தமிழக முதல்- அமைச்சர் எங்களை அழைத்து பாராட்டியது எங்களின் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று மகிழ்கிறோம்.

தனியார் விண்வெளி ஆராய்ச்சி மையம்

தமிழக முதல்-அமைச்சர் எங்களது குழுவிற்கு வழங்கும் ரூ.10 லட்சத்தை வைத்து மேலும் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளோம். எங்களின் குறிக்கோள் என்னவென்றால் இந்தியாவில் தனியார் விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைப்பதுதான். மாணவ-மாணவிகளுக்கு நாங்கள் சொல்ல விரும்புவது என்னவென்றால் விண்வெளி ஆராய்ச்சியில் மட்டும் இன்றி, நீங்கள் அறிவியல் ஆராய்ச்சியிலும் ஈடுபட வேண்டும். எங்கள் குழு இயக்குனர் ஸ்ரீமதிகேஷன் அறிவுறுத்தலின்பேரில் மேலும் பல ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story