சிகிச்சை பெற்ற பெண் திடீர் சாவு: தனியார் மருத்துவமனைக்கு எதிராக 2–வது நாளாக உறவினர்கள் போராட்டம்


சிகிச்சை பெற்ற பெண் திடீர் சாவு: தனியார் மருத்துவமனைக்கு எதிராக 2–வது நாளாக உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 17 July 2017 10:00 PM GMT (Updated: 17 July 2017 9:39 PM GMT)

சிகிச்சை பெற்றுவந்த பெண் திடீரென்று இறந்ததால், தனியார் மருத்துவமனைக்கு எதிராக 2–வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

புதுவை மாநிலம் சேதராப்பட்டு சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பூபேஷினி (36). இவருக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பூபேஷினி திடீரென இறந்துபோனார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பூபேஷினிக்கு முறையான சிகிச்சை அளிக்காததால், அவர் இறந்துவிட்டதாக கூறி, அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடலூர் – புதுச்சேரி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தனவேலு மற்றும் கிருமாம்பாக்கம், ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பூபேஷினியின் உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனால் உடலை வாங்க மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று 2–வது நாளாக பூபேஷினியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் புதுச்சேரி – கடலூர் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன், கிருமாம்பாக்கம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தனசெல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை அவர்கள் ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த தனவேலு எம்.எல்.ஏ., போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பூபேஷினியின் இறப்புக்கு இழப்பீடு பெற்றுத்தருவதாக உறுதி கூறினார். இதையடுத்து பூபேஷினியின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். மேலும் போராட்டத்தையும் கைவிட்டனர்.

சாலைமறியல் போராட்டம் காரணமாக புதுச்சேரி – கடலூர் சாலையில் காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பயணிகள் அவதிப்பட்டனர்.


Next Story