எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: அடியக்கமங்கலத்தில் மருத்துவ முகாம் கலெக்டர் பங்கேற்பு


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: அடியக்கமங்கலத்தில் மருத்துவ முகாம் கலெக்டர் பங்கேற்பு
x
தினத்தந்தி 25 July 2017 10:30 PM GMT (Updated: 25 July 2017 9:21 PM GMT)

திருவாரூரை அடுத்த அடியக்கமங்கலத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் கலெக்டர் நிர்மல்ராஜ் கலந்து கொண்டார்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள அடியக்கமங்கலத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 19-ந் தேதி திருவாரூரில் நடைபெறுகிறது. இதையொட்டி சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதில் கண் பரிசோதனைக்காக சிறப்பு டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பரிசோதனை செய்தனர். இதில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ள 30 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல 50 பேர் ரத்த தானம் செய்துள்ளனர். குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தேவையான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவ பிரிவு சார்பில் நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டன. இந்த மருத்துவ முகாமை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் வேளாண்மை இணை இயக்குனர் மயில்வாகணன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம், வட்டார மருத்துவ அலுவலர் சின்னதுரை, மருந்தாளுனர்கள் பைரவநாதன், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story