நாகர்கோவிலில் பேக்கரி ஊழியர் வீட்டு கதவை உடைத்து நகை கொள்ளை


நாகர்கோவிலில் பேக்கரி ஊழியர் வீட்டு கதவை உடைத்து நகை கொள்ளை
x
தினத்தந்தி 15 Aug 2017 10:15 PM GMT (Updated: 15 Aug 2017 9:29 PM GMT)

நாகர்கோவில் வடசேரியில், பேக்கரி ஊழியர் வீட்டு கதவை உடைத்து நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி வணிகர் தெருவை சேர்ந்தவர் அமீர் அராபத் (வயது 37). இவர் அப்பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். அவர் குடும்பத்துடன் திட்டுவிளையில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை, அவர் வீட்டு கதவு உடைந்து கிடப்பதை கண்டு அக்கம், பக்கத்தினர் சந்தேகமடைந்தனர். இதுகுறித்து அவர்கள், அமீர் அராபத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், வடசேரிக்கு வந்த அவர், வீட்டுக்குள் சென்று பார்த்தார்.

அப்போது பீரோ கதவு திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிமணிகள், பொருட்கள் எல்லாம் கீழே சிதறி கிடந்தன. மேலும், பீரோவில் வைத்திருந்த அவருடைய குழந்தைகளின் கம்மல், காப்பு உள்ளிட்ட 2 பவுன் தங்கநகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து வடசேரி போலீசில் அமீர் அராபத் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் வடசேரி பரதர் தெருவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் நாகராஜ் என்பவர் வீட்டு கதவை உடைத்து, 3 பவுன் நகை, 17 ஆயிரம் ரொக்கபணம் உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அடுத்தடுத்து நடந்து வரும் சம்பவங்களால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


Related Tags :
Next Story