கோவில்பட்டியில் ஸ்டாலின் உருவபொம்மையை எரிக்க முயற்சி; 17 பேர் கைது


கோவில்பட்டியில் ஸ்டாலின் உருவபொம்மையை எரிக்க முயற்சி; 17 பேர் கைது
x
தினத்தந்தி 9 Sep 2017 9:00 PM GMT (Updated: 9 Sep 2017 12:17 PM GMT)

மாணவி அனிதா தற்கொலை தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறி இருந்தார்.

கோவில்பட்டி,

மாணவி அனிதா தற்கொலை தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறி இருந்தார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்ததாக கூறி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உருவபொம்மையை கோவில்பட்டி தாலுகா அலுவலகம் அருகில் உள்ள வீரன் சுந்தரலிங்கம் சிலை அருகில் புதிய தமிழகம் கட்சியினர் நேற்று காலை எரிக்க முயன்றனர்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ், சப்– இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் போலீசார் விரைந்து சென்று, உருவபொம்மையை பறித்தனர். பின்னர் ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் வீரமணி ஆகியோரின் படங்களை தீ வைத்து எரிக்க முயன்றனர். உடனே அவற்றையும் போலீசார் பறித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் அன்புராஜ், இளைஞர் அணி செயலாளர் கிரிபாலா, ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், அதிகுமார், துணை செயலாளர் குருபாதம், விவசாய அணி செயலாளர் பேச்சிமுத்து, வர்த்தக அணி செயலாளர் குழந்தைவேல், எட்டயபுரம் நகர செயலாளர் கலைச்செல்வம் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story