காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,700 கனஅடியாக அதிகரிப்பு


காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,700 கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 9 Sep 2017 11:00 PM GMT (Updated: 9 Sep 2017 9:22 PM GMT)

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,700 கனஅடியாக அதிகரித்தது. இதனால் 9-வது நாளாக பரிசல் இயக்க தடைவிதிக்கப்பட்டது.

பென்னாகரம்,

கர்நாடக மாநிலத்தில் கடந்த வாரம் தொடர்மழை பெய்ததால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. இதனால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை 8 மணி அளவில் வினாடிக்கு 13,500 கனஅடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்து மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 13,700 கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 9-வது நாளாக நீடித்தது. நேற்று ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் பார்வை கோபுரம், தொங்கு பாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்ததால் போலீசார் மெயின் அருவி, நடைபாதை, முதலை பண்ணை, பரிசல்துறை மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் ரோந்து சென்று கண்காணித்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிக்குமாறு ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தினர். 

Related Tags :
Next Story