நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி சேலத்தில், அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி சேலத்தில், அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Sep 2017 10:45 PM GMT (Updated: 13 Sep 2017 9:19 PM GMT)

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி சேலத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சேலம்,

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான வக்கீல் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.பார்த்திபன், மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன், மாநகர செயலாளர் ஜெயக்குமார், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நீட் தேர்வுக்கு எதிராக கோஷம்

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, நீட் தேர்வு மூலம் இந்தியை திணிக்காதே..! மாநில கல்வி உரிமையை பறிக்காதே..! தமிழக மாணவர்களை வஞ்சிக்காதே..! என்றும், நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது, திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. ஆனால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், அங்கிருந்து கலைந்து செல்லாமல் கொட்டும் மழையில் நனைந்தவாறு நீட் தேர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராகவும், எதிர்க்கட்சிகளின் போராட்டம் குறித்தும் பேசினர்.

ஆட்சி மாற்றம்

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பேசுகையில், தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை பாதிக்கும் நீட் தேர்வு தேவையில்லை என்று சொல்ல கூட அருகதை இல்லாத அரசாக அ.தி.மு.க. அரசு உள்ளது. நீட் தேர்வால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்தார். தமிழகத்தில் லட்சகணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் நீட் தேர்வுக்கும், தமிழக பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும், என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.மாவட்ட துணை செயலாளர் ரகுபதி, மாநில தீர்மானக்குழு உறுப்பினர் தாமரைக்கண்ணன், சேலம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரெயின்போ நடராஜன், தொ.மு.ச.மாவட்ட கவுன்சில் தலைவர் மணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை பிரபு, வக்கீல் அண்ணாமலை, மத்திய மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சங்கீதா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அறிவழகன் உள்பட அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story