நீட்தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க கோரி தி.மு.க., தோழமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நீட்தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க கோரி தி.மு.க., தோழமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Sep 2017 11:00 PM GMT (Updated: 13 Sep 2017 9:21 PM GMT)

நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க கோரி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட தி.மு.க. சார்பில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க கோரி தோழமை கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய-மாநில அரசுகள் தான் மாணவர்களை ஏமாற்றி விட்டன. அதன் விளைவு தான் மாணவி அனிதாவின் துயர முடிவுக்கு காரணம் என குற்றம் சாட்டினர். மேலும் மாநில அரசின் கல்வி அதிகாரத்தில் மத்திய அரசு தலையிட கூடாது.

கோஷங்கள்

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங் களை எழுப்பினர். இதில், தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் காமராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் உலக நாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிற்றம்பலம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய முஸ்லிம் லீக் கட்சி உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூரில்...

இதேபோல் நீட்தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க கோரி தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் உள்ளிட்ட அனைத்துகட்சிகள் சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அதன்படி பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் உள்ளிட்ட அனைத்துகட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளித்து, பிளஸ்-2 பொதுத்தேர்வில் பெற்ற கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையை அனுமதிக்க கோரியும், நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத நிலையில் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்ட குழுமூர் மாணவி அனிதாவின் மறைவிற்கு அஞ்சலி தெரிவித்தும் பலர் பேசினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஞானசேகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, தி.மு.க. பொறுப்பாளர் டாக்டர் தேவராஜன், நகர செயலாளர் பிரபாகரன், காங்கிரஸ் கட்சி சார்பில் தேனூர் கிருஷ்ணன், சையது பதோதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளான பேர் கலந்து கொண்டனர். 

Next Story