‘புல்லட் ரெயில் சாமானிய மனிதனின் கனவு திட்டம் அல்ல’ மத்திய அரசு மீது சிவசேனா காட்டம்


‘புல்லட் ரெயில் சாமானிய மனிதனின் கனவு திட்டம் அல்ல’ மத்திய அரசு மீது சிவசேனா காட்டம்
x
தினத்தந்தி 14 Sep 2017 10:07 PM GMT (Updated: 14 Sep 2017 10:07 PM GMT)

‘‘புல்லட் ரெயில் என்பது சாமானிய மனிதனின் கனவு திட்டம் அல்ல’’ என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

மும்பை,

‘‘புல்லட் ரெயில் என்பது சாமானிய மனிதனின் கனவு திட்டம் அல்ல’’ என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

புல்லட் ரெயில்

மும்பை– ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்தை பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயும் நேற்று கூட்டாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். இந்த நிலையில், புல்லட் ரெயில் திட்டத்தை விமர்சித்து பாரதீய ஜனதா கூட்டணி கட்சியான சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் நேற்று தலையங்கம் வெளியானது. அதில் கூறி இருப்பதாவது:–

நாடு தொழில்நுட்பத்திலும், அறிவியலிலும் முன்னேற்றம் அடைவதை உறுதிப்படுத்துவதற்காக பக்ரா நங்கல் அணைக்கட்டு முதல் பாபா அணு ஆராய்ச்சி மையம் வரை ஏராளமான திட்டங்களுக்கு முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு அடிக்கல் நாட்டினார். இந்த திட்டங்கள் அனைத்தும் நாட்டுக்கு தேவைப்பட்டன.

ரூ.30 ஆயிரம் கோடி

இப்போது நாம் கேட்காமலேயே புல்லட் ரெயிலை பெறுகிறோம். இந்த புல்லட் ரெயில் நாட்டின் தேவைக்கு பொருத்தமானதாக இருக்குமா? எந்த பிரச்சினையை இந்த புல்லட் ரெயில் திட்டம் தீர்க்கும் என்பது நமக்கு சரியாக தெரியவில்லை.

புல்லட் ரெயில் திட்டத்துக்கான மதிப்பீடு ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடியில், மராட்டிய அரசு குறைந்தது ரூ.30 ஆயிரம் கோடியாவது அள்ளி வீசவேண்டும். விவசாயிகள் பல ஆண்டுகளாக பயிர்க்கடனை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.

ஜப்பானியர்களுக்கே வேலைவாய்ப்பு

ஆனால், புல்லட் ரெயிலை யாரும் கேட்கவில்லை. புல்லட் ரெயில் என்பது செல்வந்தர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் தானே தவிர, சாமானிய மனிதனின் கனவு திட்டம் அல்ல. இந்த புல்லட் ரெயில் திட்டத்தால் வேலைவாய்ப்பு உருவாகும் என்று கூறுவது முற்றிலும் தவறு. ஏனென்றால், இந்த திட்டத்துக்கான எந்திரத்தில் இருந்து தொழிலாளர்கள் வரை அனைத்தையும் ஜப்பான் அரசே அந்நாட்டில் இருந்து கொண்டு வந்துவிடும்.

இவ்வாறு அதில் சிவசேனா தெரிவித்துள்ளது.


Next Story